×

லாரிகள் உரசியதால் ‘டோர்’ உடைந்தது சாலையில் சரிந்த சிமெண்ட்டை அள்ளிச்சென்ற பொதுமக்கள்: சோளிங்கர் அருகே பரபரப்பு

சோளிங்கர்: சோளிங்கர் அருகே லாரிகள் உரசியதால் டோர் உடைந்து சிமெண்ட் சரிந்து விழுந்தது. இதை பொதுமக்கள் அள்ளிச்சென்றனர். வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியில் தனியார் சிமெண்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. நேற்று மாலை இங்கிருந்து 500 சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வேலூருக்கு புறப்பட்டது. சோளிங்கர் அடுத்த பெருங்காஞ்சி ஏரிக்கரை அருகே உள்ள வளைவில் சென்றபோது எதிரே ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரியும் சிமெண்ட் லாரியும் நேருக்குநேர் மோதுவதுபோல் வந்தது. இதனால் சிமெண்ட் லாரி டிரைவர் லாரியை இடதுபுறமாக திருப்பினார்.

இருப்பினும் சிமெண்ட் லாரியின் வலதுபுறத்தில் உள்ள ‘பக்கவாட்டு டோர்’ மீது ஜல்லி லாரி உரசியுள்ளது. இதில் சிமெண்ட் லாரியின் முன்பகுதி முதல் பின்பகுதி வரை ‘பக்கவாட்டு டோர்’ முற்றிலும் நொறுங்கியது. லாரியில் இருந்த சிமெண்ட் மூட்டைகள் சரிந்து சாலையில் விழுந்தது. மேலும் இந்த விபத்தில் சிமெண்ட் லாரி டிரைவர் சுரேஷ் லேசான காயம் அடைந்து மயங்கினார். சிமெண்ட் மூட்டைகள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல் டிப்பர் லாரியின் வலதுபுறமும் சேதமானது. விபத்து நடந்த லாரியில் இருந்து சிமெண்ட் மூட்டைகள் சரிந்துள்ள தகவல் அருகே உள்ள கொடைக்கல், ெபருங்காஞ்சி மற்றும் சுற்றுப்புற கிராமத்தில் பரவியது. இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் அங்கு வந்து சாலையில் கிடந்த சிமெண்ட் மூட்டைகளை அள்ளிச்சென்றனர்.

தகவலறிந்த கொண்டபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லாரியை மீட்டு போக்குவரத்தை சீரமைத்தனர். இதனை தொடர்ந்து சிமெண்ட்டை அள்ளிச்சென்ற பொதுமக்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து டிப்பர் லாரி டிரைவர் அன்பு கொண்டபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Door , Larry, Cement, Public
× RELATED மக்களவை தேர்தலில் 100 சதவீதம்...