×

என்எல்சி இந்தியா சார்பில் ரூ3.80 கோடி செலவில் 3 ஏரிகளில் புனரமைப்பு பணி தொடக்கம்

நெய்வேலி: கடலூர் மாவட்டத்தில் வாலாஜா ஏரி உள்ளிட்ட சுமார் 20 ஏரிகள் மற்றும் பெரிய குளங்களையும், பரவனாறு மற்றும் செங்கால் ஓடை போன்ற வாய்க்கால்களையும் என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் மூலம் தூர்வாரி ஆழப்படுத்தி வருகிறது. நடப்பு நிதியாண்டில் கடலூர் மாவட்டம், கும்மிடிமூலை பகுதியில் உள்ள புத்தேரியையும், நத்தமேடு பகுதியில் அமைந்துள்ள தங்கல் ஏரியையும், சொக்கன் கொல்லையில் அமைந்துள்ள பெரியமணல் ஏரியையும் ரூ. 3 கோடியே 80 லட்சத்து 45 ஆயிரம் செலவில் தூர்வாரி ஆழப்படுத்தி புனரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.  

சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட புத்தேரியில் என்எல்சி நிறுவனம் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் கனமீட்டர் மணலை எடுத்து ஆழப்படுத்தவிருப்பதுடன், பழுதடைந்த மதகுகளை சரிசெய்து, புதிய கதவுகளையும் பொருத்த உள்ளது. தங்கல் ஏரியில் ரூ. 89 லட்சம் மதிப்பீட்டில், சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் கனமீட்டர் மணலை எடுத்து ஆழப்படுத்த விருப்பதுடன், பழுதடைந்த மதகுகளை சரிசெய்து, புதிய கதவுகளையும் பொருத்த உள்ளது. வாய்க்கால்களை தூர்வாரி செப்பனிடவும் திட்டமிட்டுள்ளது. 45 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரியமடுவு ஏரியில் 1 லட்சத்து 40 ஆயிரம் கன மீட்டர் மணலை எடுத்து ஆழப்படுத்த விருப்பதுடன், பழுதடைந்த மதகுகளை சரிசெய்து, புதிய கதவுகளையும் பொருத்த உள்ளது.

வாய்க்கால்களை தூர்வாரி செப்பனிடவும் திட்டமிட்டுள்ளது. இப்பணிகளுக்கான பூமிபூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதில் என்எல்சி இந்தியா நிறுவன சமூகப் பொறுப்புணர்வுத்துறை தலைமை பொதுமேலாளர் மோகன், பொதுமேலாளர் ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதே தினத்தில் என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில், கடலூர் வெள்ளிக்கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் தூய்மை குறித்து விழிப்புணர்வு வீதி நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சிகளை நடத்தினர். விழிப்புணர்வுப் பேரணியும் நடைபெற்றது.

Tags : lakes ,NLC India , Reconstruction work in NLC India, Lakes
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!