டெல்லி : அயோடின் உப்பை பயன்படுத்தும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. உடலின் வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்களை தூண்டும் திறன் அயோடினுக்கு உள்ளது. உணவின் மூலம் அயோடின் தேவை நிறைவடையாததால், பாகுபாடின்றி அனைவரையும் சென்றடையும் உப்பு மூலமாக அயோடின் உடலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் இந்திய அயோடின் சர்வே 2018 -2019 என்ற பெயரில் நாடு முழுவதும் 21,406 வீடுகளில் ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவில் நாடு முழுக்க 76.3%பேர் அயோடின் உப்பை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. உப்பு உற்பத்தியில் நாட்டின் 3வது பெரிய மாநிலமான தமிழகம் இந்த பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. 61.9%பேர் மட்டுமே தமிழகத்தில் அயோடின் உப்பை பயன்படுத்துகின்றனர். முதல் 5 இடங்களின் முறையே ஜம்மு - காஷ்மீர், நாகலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் மேகாலயா மாநிலங்கள் உள்ளன. கடைசி 5 இடங்களை தமிழ்நாடு, ஆந்திரா, ராஜஸ்தான், ஒடிசா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளன.