×

பண்ருட்டியில் பிரேக் பிடிக்காமல் தறிகெட்டு ஓடிய லாரி : எதிரில் வந்தவர்களை கண்முன் தெரியாமல் மோதியதில் ஒருவர் பலி, ஐவர் காயம்

கடலூர் : கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பிரேக் பிடிக்காத டிப்பர் லாரி கார் மீது மோதியதுடன் சில மீட்டர் தொலைவிற்கு காரையும் இழுத்து சென்றது. இந்த கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு சென்னையில் இருந்து டிப்பர் லாரி ஒன்று வந்தது. 4 முனை சந்திப்பை கடக்கும் போது, லாரியில் பிரேக் பிடிக்காததால் அங்கிருந்த பொது மக்கள் மீது பாய்ந்தது. அத்துடன் எதிரே வந்த கார் மீது மோதியதுடன், அந்த காரையும் தரத்தரவென சில மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது.

அடுத்தடுத்து இரு சக்கர வாகனங்கள் மீது மோதிய தறிகெட்டு ஓடிய லாரியை கண்டவர்கள் நாளாப்பக்கமும் சிதறி ஓடினர். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. கார் ஓட்டுநர் காமராஜ் பிரேக்கை அழுத்திப் பிடித்ததால் காருடன் சேர்ந்து லாரியும் நின்றது. ஆனால் லாரியும் சிக்கியதால் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காருக்குள் இருந்த ஓட்டுநர் காமராஜை மீட்டனர். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ஜெயக்குமார், ராஜீவ் காந்தி, பரமானந்தம், சிவக்குமார் ஆகியோர் காயம் அடைந்தனர். ஆனால் லாரியில் சிக்கி படுகாயம் அடைந்த ரங்கநாதன் சம்பா இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநர் ராமச் சந்திரனை கைது செய்தனர்.


Tags : collision , Panruti, Cuddalore, truck, driver, case record, arrest
× RELATED தண்டவாளத்தை கடக்க முயன்றபோது சோகம்; ரயில் மோதி 4 பேர் பரிதாப பலி