×

பள்ளியில் மயக்க மருந்து கொடுத்து 4ம் வகுப்பு சிறுமி பலாத்காரம் 2 ஆசிரியர்கள் மீது வழக்குபதிவு

தன்பாத்: ஜார்க்கண்டில் பள்ளியின் துணை தலைமை ஆசிரியரும், வகுப்பாசிரியரும் 4ம் வகுப்பு சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் பிரபல தனியார் பள்ளியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. அப்பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் சிறுமி, கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவளது பெற்றோர், டாக்டரிடம் அழைத்துச் சென்றுள்ளார். சிறுமியை பரிசோதித்த டாக்டர், அச்சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாகி இருப்பதாக கூறி உள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்தபோது, ஒரு மாதத்திற்கு முன்பு பள்ளி ஆசிரியர்கள் தன்னை பலாத்காரம் செய்த பயங்கர சம்பவத்தை கூறி அழுதுள்ளார். சம்பவத்தன்று, சிறுமி வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் வகுப்பாசிரியர், சிறுமியை மருத்துவ அறைக்கு சென்று மருந்து வாங்கி சாப்பிடுமாறு கூறி உள்ளார். அங்கு சென்ற சிறுமிக்கு, ஒரு மாத்திரை தரப்பட்டுள்ளது.

அதை சாப்பிட்டதும் சிறுமி மயங்கி விழுந்துள்ளார். பின்னர், பள்ளியின் துணை தலைமை ஆசிரியரும், வகுப்பாசிரியரும் சேர்ந்து மருத்துவ அறையில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக போலீஸ் எப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கட்ராஸ் போலீசார், பள்ளியின் துணை தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  மேலும் இரு ஆசிரியர்கள் மற்றும் நர்சிடம் விசாரித்து வருகின்றனர். மருத்துவ அறிக்கை வந்ததும் மேற்கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Teachers ,school , Giving anesthesia at school, Class 4 girl raped
× RELATED தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா