குலசேகரம்: குமரி மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலாத்தலமான திற்பரப்பு அருவியில் குறிப்பிட்ட சீசன் என்றில்லாமல் தண்ணீர் எப்போதும் கொட்டும். இதனால் பயணிகள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். விடுமுறை நாட்கள் மட்டுமில்லாமல் சனி, ஞாயிறு நாட்களிலும் கூட்டம் அலைமோதும். கடந்த சில நாட்களாக சாரல் மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்ததால் திற்பரப்பில் அருவியாக விழும் கோதையாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் கடந்த ஒரு வாரமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் அருவியில் கூட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. இந்த நிைலயில் ேநற்று முதல் மழை குறைந்து வெயில் அடித்து வருகிறது.
தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகை களைகட்டியுள்ளது. இதனால் கேரளாவில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் கேரளாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களை நாடி வருகின்றனர். இவர்களின் பயண திட்டத்தில் திற்பரப்பு அருவியும் முக்கிய இடம் பிடித்துள்ளது. தற்போது இங்கு மழை குறைந்து வெயி்ல அடிப்பதாலும், அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதாலும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க ஆர்வமுடன் வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதலே கேரளாவை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் அருவியில் குழுமினர்.
ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் குளித்து மகிழ்ந்ததோடு, அருவியின் மேற்பகுதியில் உள்ள தடுப்பணையில் கூட்டம் கூட்டமாக சென்று படகுகளில் உல்லாச பயணம் செய்து கோதையாற்றின் இரு கரைகளிலும் உள்ள சோலை வனத்தை கண்டு ரசித்தனர். கேரள பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் தற்போது மீண்டும் திற்பரப்பு அருவி களைகட்ட தொடங்கி உள்ளது.