×

தென் இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை: ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி தகவல்

புதுடெல்லி: தென் இந்தியாவின் சில பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம் என தகவல் கிடைத்துள்ளதாக ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி தெரிவித்துள்ளார். மேலும் பயங்கரவாத செயல்கள் எதுவும் நேராமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.  குஜராத் அருகே சர் கிரீக் பகுதியில் இருந்து ஆளில்லாத சில படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஏற்கனவே, லஷ்கர்-இ-தைபா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை அளித்த தகவலை தொடர்ந்து, பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 6 தீவிரவாதிகள் இலங்கையில் இருந்து கடல் வழியாக கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சென்றதாக போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக மாநிலம் முழுவதும் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் உட்பட பல இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது, தென் இந்தியாவை தீவிரவாதிகள் தாக்கலாம் என வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் அடுத்தடுத்து ஏற்பட்ட வெடிகுண்டு சம்பவங்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் என பலர் பரிதாபமாக உயிரிழந்தனர். இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து தமிழகத்தில் தீவிரவாத ஊடுருவல் இருப்பதாக தகவல் அடிப்படையில் மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க, எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கையை எதிர்த்து இந்த தாக்குதல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் படைகள் குவிக்கப்பட்டு வருவதாகவும், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசாரை பாகிஸ்தான் அரசு ரகசியமாக விடுதலை செய்ததாகவும் தகவல்கள் இன்று வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

Tags : SK Saini ,militants ,South India ,Army , South India, terrorists, infiltration, attack, intelligence alert
× RELATED முட்டை உற்பத்தியில் முதலிடம்...