×

18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டினால் 25 வயது வரை லைசென்ஸ் பெற முடியாது

*திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் அறிவிப்பு

சேலம் : 18: வயதுக்கு கீழ் உள்ளவர்கள்,பள்ளி மாணவ, மாணவிகள் வாகனங்கள் ஓட்டினால் 25 வயது வரை எவ்வித ஓட்டுநர் உரிமமும் பெற இயலாது என்று போக்குவரத்துத்துறை கடுமையாக எச்சரித்துள்ளது. தமிழகத்தில் ஒன்றரை கோடிக்கு அதிகமான வாகனங்கள் உள்ளன. சமீப காலமாக இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போகிறது. வாகனங்கள் பெருக்கத்திற்கு ஏற்ப தமிழகத்தில் போதுமான சாலை வசதிகள் இல்லை. வாகன பெருக்கம் காரணமாக  சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

வாகனம் பெருக்கத்திற்கு ஏற்ப,சிறார்கள் வாகனம் ஓட்டுவதும் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து விதிமுறைகள் தெரியாமல் சிறார்கள் சகட்டுமேனிக்கு வாகனத்தை வேகமாக ஓட்டுகின்றனர். வாகனம் நெருக்கம் உள்ள சாலையில் கூட, இவர்கள் வேகமாக செல்கின்றனர்.இவர்களால் சாலையில் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்கும் வகையில்,தமிழக போக்குவரத்துத்துறை திருத்தப்பட்ட மோட்டார் வாகனச்சட்டத்தில் 18 வயதுக்கு கீழ் உள்பவர்கள்,பள்ளி மாணவ, மாணவிகள் வாகனம் ஓட்டினால், அவர்களின் பெற்ேறார்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கவும், மேலும் ஓட்டுநர் உரிமம் பெறவும் கடும் கட்டுப்பாடுகளை போக்குவரத்துத்துறை விதித்துள்ளது.

இது குறித்து சேலம் வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிட்டு பார்க்கையில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகள் இரு சக்கர வாகனம் ஓட்டுவது 15 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல் நான்கு சக்கர வாகனமான கார் ஓட்டுவது 2 சதவீதம் அதிகரித்துள்ளது. வாகனத்தை இயக்கும்போது, போக்குவரத்து விதிமுறைகள் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டும். அதற்காகத்தான் ஓட்டுநர் உரிமம் பெற பல்வேறு கட்டங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

சில பெற்றோர்கள் பெருமைக்காக சிறுவர், சிறுமியர்களிடம் வாகனத்தை கொடுத்துவிடுகின்றனர். அவர்கள் பெற்றோர்கள் முன்பு குறைந்த வேகத்தில் ஓட்டுகின்றனர்.ஆனால் சாலைக்கு வரும்போது அவர்கள் 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்கின்றனர்.ஒரே வாகனத்தில் இரண்டு அல்லது மூன்று பேரை அமர்த்திக்கொண்டு வேகமாக ஓட்டுகின்றனர்.இதன் காரணமாக பின்னால் வருபவர்கள் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். தற்போது தமிழக அரசு திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் சிறார்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

2019 சட்டப்பிரிவு 199(ஏ)ன் படி உரிய ஓட்டுநர், பழகுநர் உரிமம் பெறாமல் மோட்டார் வாகனங்ளை ஓட்டும் சிறார்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு ₹25 ஆயிரம் அபராதமும்,3 ஆண்டு சிறை தண்டனையும் வழங்க சட்டத்தில் இடம் உள்ளது. மேலும் சிறார்கள் 12 மாதங்களுக்கு சாலையில் வாகனம் ஓட்டுவது ரத்து செய்யப்படும். வாகனத்தை ஓட்டிய சிறார்களின் 25 வயது வரை எவ்வித ஓட்டுநர் உரிமமும் பெற இயலாது. திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்திலேயே அதிக அபராதம் சிறார் வாகனம் ஓட்டுவது தான். இனிவரும் காலத்தில் பெருமைக்காக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் வாகனத்தை கொடுக்க வேண்டாம்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


Tags : Schoolchildren , School Students,age ,Drive , license
× RELATED ஸ்ரீநகரில் ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து..!!