×

மதுரையில் இரவு ரோந்தின்போது போலீசாரை தாக்க முயன்ற கும்பல் சுற்றிவளைப்பு: துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர்

மதுரை: மதுரையில் இரவு ரோந்துப் பணியின் போது போலீசாரை தாக்க முயன்ற 3 பேரில் 2  பேரை போலீசார் கைது ெசய்தனர். தப்பிய ஒருவரை தேடி வருகின்றனர்.மதுரை நகர் பகுதிகளில் போலீசார் தினமும் இரவு முதல் அதிகாலை வரை வாகன சோதனை மற்றும் ரோந்துப்பணிகளில் ஈடுபடுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவும் வழக்கம் போல் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகனச்  ேசாதனையில் ஈடுபட்டிருந்தனர். இரவு 10.30 மணியளவில், தெப்பக்குளம் பகுதியில், எஸ்ஐ சிவராமகிருஷ்ணன் தலைமையில் 3 போலீசார் ரோந்து சென்றனர்.காமராஜர் சாலை தென்கரை ரோட்டில் சென்றபோது, ஒரு ஆட்டோவில் அமர்ந்து சிலர் மது அருந்திக் கொண்டிருந்தனர். மேலும் அவர்களுக்குள் சத்தம் போட்டு தகராறு செய்துள்ளனர். சத்தம் கேட்டு, அங்கு போலீசார் சென்றனர். ஆட்டோவில் 3  பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் போக்குக் காட்டியபடியே, ஆட்டோவை எடுத்துக் கொண்டு தப்ப முயன்றனர். போலீசார் அவர்களை நிறுத்தியபோது திடீரென  போலீசாரை சட்டையை பிடித்து தாக்க முயன்றனர். உடனடியாக எஸ்ஐ சிவராமகிருஷ்ணன், தற்காப்புக்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும்,  அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதில் 2 பேரை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

இதற்கிடையே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து, அங்கிருந்து, போலீசார் வேனில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 2 பேரையும் பிடித்து, வேனில் ஏற்றி தெப்பக்குளம் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு  அவர்களிடம் உதவி கமிஷனர் சூரக்குமார் விசாரணை நடத்தினார்.இதில், அவர்கள் மதுரை காமராஜர் சாலைைய சேர்ந்த ராஜகணேஷ் (28), ரமேஷ் (41) மற்றும் பழனிபாரதி என தெரியவந்தது. இதில் ராஜகணேஷ், பழனிபாரதி இருவர் மீதும் கொலை வழக்கு உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.  இவர்கள் வைகை ஆற்றின் கரையில் அமர்ந்து நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு  செய்யப்பட்டது. ராஜகணேஷ், ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தப்பிய பழனிபாரதியை தேடி வருகின்றனர்.

Tags : shootings ,Madurai ,night patrol , night patrol , Madurai, attack ,police Gang Roundup, Gunmen fired
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...