×

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி கம்பெனி ஊழியர் பலி

* பிறந்த நாளில் சோகம்  
* மற்றொருவர் ‘சீரியஸ்’
திருநின்றவூர்: திருநின்றவூரில் கழிவுநீர் தொட்டி அடைப்பை நீக்க உள்ளே இறங்கிய கம்பெனி ஊழியர் விஷவாயு தாக்கி பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.    திருவள்ளூர் அருகே பேரத்தூர், மாந்திப்பை கிராமத்தை சேர்ந்தவர் சம்பத்குமார் (24). தனியார் கம்பெனி ஊழியர். இவருக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் என்பதால், தனது நண்பர் நரேந்திரன் (31) என்பவருடன் திருநின்றவூர் ஓம்சக்தி நகரில் உள்ள ஆசிரமத்தில் உள்ள குருஜியிடம் ஆசீர்வாதம் வாங்க சென்றார். மாலை 7 மணி அளவில் இவர்கள் இருவரும் ஆசிரமத்தில் குருஜியிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு, அவரிடம் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, தனது குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியில் அடைப்பு இருப்பதாகத குருஜி கூறியுள்ளார். இதனையடுத்து, சம்பத்குமார் தனது நண்பருடன் சேர்ந்து அடைப்பை சரி செய்வதாக கூறியுள்ளனர். பின்னர், கழிவுநீர் தொட்டியில் நரேந்திரன் இறங்கியபோது, விஷவாயு தாக்கி தொட்டிக்குள் மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சம்பத்குமார் உடனே தொட்டிக்குள் இறங்கி, நண்பரை காப்பாற்ற முயன்றுள்ளார்.

அப்போது, அவரையும் விஷவாயு தாக்கியதில் மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த குருஜி, உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த வீரர்கள், தொட்டியில் இறங்கி, இருவரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதற்குள் சம்பத்குமார் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய நரேந்திரனை மீட்டு சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தகவலறிந்து திருநின்றவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்பத்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து குருஜியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த நாளில் விஷவாயு தாக்கி வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags : gas attack , Employee dies, poison gas, attack,cleaning sewer tank
× RELATED சென்னை பட்டினப்பாக்கம்...