ஹாங்காங்: சீனாவின் பிடியில் இருந்து தங்களை விடுவிக்கும்படி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு ஹாங்காங் போராட்டக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஹாங்காங்கில் குற்றம் செய்பவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹாங்காங்கில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக வார இறுதி நாட்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலையம், விமான நிலையம், பல்கலைக் கழகம், தூதரகம் ஆகியவற்றின் முன், கருப்பு வெள்ளை முகமூடி, மஞ்சள் நிற ஆடை, குடை போராட்டம் உள்ளிட்ட பலவகை போராட்டங்களை முன்னின்று நடத்தி வருகின்றனர்.இதையடுத்து, மசோதாவை திரும்ப பெற்று கொள்வதாக ஹாங்காங் அரசு கடந்த வாரம் உறுதி அளித்தது. ஆனால் போராட்டக் குழுவினர், தற்போது பெரும் ஜனநாயகம் உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கருப்பு சட்டையுடன் முகமூடி அணிந்து நேற்று அமெரிக்க தூதரகத்தை நோக்கி போராட்டக் குழுவினர் ஊர்வலம் சென்றனர். அப்போது, அமெரிக்க கொடிகளையும், `அதிபர் டிரம்ப், தயவுசெய்து ஹாங்காங்கை விடுவியுங்கள்’ என்ற பதாகைகளையும் ஏந்தியபடி கோஷமிட்டனர். ஹாங்காங் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் சட்டத்துக்கு ஆதரவளித்து அமெரிக்கா தீர்மானம் இயற்ற அவர்கள் வலியுறுத்தினர். மேலும், அந்த தீர்மானத்தில், ஹாங்காங்கில் ஜனநாயகம், மனித உரிமைகளை நசுக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் ஹாங்காங், சீன அதிகாரிகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கவும் இதனால் அமெரிக்கா உடனான ஹாங்காங்கின் வரியற்ற வர்த்தக சலுகை பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிடும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது.இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தற்போது ஹாங்காங்கில் நடைபெறும் போராட்டத்துக்கு அமெரிக்காவே காரணம் என சீனா தவறாக குற்றம் சாட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.