புதுடெல்லி: வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை கண்டறிய உதவியாக, சுவிஸ் வங்கி தரும் முதல் கட்ட விவரங்கள் குறித்து வங்கியாளர்கள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர். , வெளிநாடுகளில் இந்தியர்களின் பரிவர்த்தனை, வங்கி கணக்கு விவரங்களை தானாக பகிர்ந்து கொள்வது தொடர்பாக சுவிட்சர்லாந்து உட்பட பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கணக்கு விவரங்களை பகிர்ந்து கொள்ளும் திட்டம் கடந்த 1ம் தேதி துவங்கியது. இதில் எந்த விவரங்கள் பகிர்ந்து கொள்ளப்படும் என்பது குறித்து வங்கியாளர்கள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:
சுவிஸ் வங்கியில் இருந்து முதல் கட்ட விவரங்கள் இனிதான் கிடைக்கும். இதில் பெரும்பாலும் தொழிலதிபர்கள் தொடர்பானவை. இவை தவிர தென்கிழக்கு ஆசிய நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆப்ரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் விவரங்களும் அடங்கும்.
மத்திய அரசு கருப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கை எடுத்ததும், சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கணக்கில் இருந்து பெரிய அளவில் பணம் வெளியேற்றப்பட்டு விட்டது. அப்போது வங்கி கணக்கின் ரகசியம் காக்கும் சுவிஸ் வங்கி முடிவால் விவரங்கள் தெரியவில்லை. ஆனால் புதிய ஒப்பந்தத்தின்படி, 2018ம் ஆண்டில் மூடப்பட்ட கணக்குகள் விவரங்களும் கிடைக்கும். இவ்வாறு இந்தியர்களின் சுமார் 100 கணக்குகளாவது மூடப்பட்டிருக்கும் என்று கருதப்படுகிறது. எனவே, முதல் கட்டமாக, இவ்வாறு மூடப்பட்ட கணக்குகளின் விவரங்களை சுவிஸ் வங்கி தருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த கணக்குகள் பெரும்பாலும், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உற்பத்தி, ரசாயனம், ஜவுளி, ரியல் எஸ்டேட், வைரம் மற்றும் நகை விற்பனை, ஸ்டீல் உற்பத்தி துறை சார்ந்த தொழிலதிபர்கள் தொடர்பானவை. இவர்களின் வங்கி கணக்கு எண் மற்றும் பரிவர்த்தனை விவரங்கள், பெயர், முகவரி, பிறந்த தேதி, வரி செலுத்துவோர் அடையாள எண் போன்றவற்றை சுவிஸ் வங்கிகள் சுவிட்சர்லாந்து அரசு அதிகாரிகளிடம் தெரிவிப்பார்கள். அவர்கள் மூலமாக இந்திய அரசிடம் விவரங்கள் ஒப்படைக்கப்படும். இது வரி ஏய்ப்பாளர்களை கண்டறிய மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றனர்.