×

திருச்செங்கோடு அருகே 32 கோழிகள், நாய்கள் விஷம் வைத்து சாகடிப்பு

*போலீசார் விசாரணை


திருச்செங்கோடு : திருச்செங்கோடு அருகே 32 கோழிகள் மற்றும் நாய்களை விஷம் வைத்து கொன்ற மர்ம நபர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள சீனிவாசம்பாளையத்தில் விசைத்தறி கூடம் நடத்தி வருபவர் பழனிச்சாமி. இதில், 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணி செய்து வருகின்றனர். நேற்று காலை இவர்களது வீடுகளுக்கு அருகே வளர்க்கப்பட்டு வந்த 17 நாட்டுக்கோழிகள் ஆங்காங்கே நிலக்கடலையில் விஷம் வைத்து கொல்லப்பட்டு கிடந்தது.

இதனை பார்த்து விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் கோழிகளை வளர்த்து வந்த சின்னபொண்ணு ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த 3 மாதங்களுக்கு முன், இதே போல் 15 கோழிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டு இருந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் வளர்க்கப்பட்ட 2 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது 17 கோழிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, திருச்செங்கோடு புறநகர போலீசில் விசைத்தறி அதிபர் பழனிச்சாமியும் கோழிகளை வளர்த்து வந்த சின்னப்பொண்ணுவும் புகார் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து திருச்செங்கோடு புறநகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து விசைத்தறி அதிபர் பழனிச்சாமி கூறுகையில், ‘எனது விசைத்தறி கூடத்தில் 40க்கும் மேற்பட்டவர்கள் பணி செய்து வருகிறார்கள். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இங்கு வளர்த்து வந்த 15 கோழிகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பு 2 நாய்கள் கொல்லப்பட்டன. தற்போது 17 கோழிகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளது. கோழிகளையும், நாய்களையும் விஷம் வைத்துக் கொள்ளும் சமூக விரோதிகளை கண்டறிந்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.

Tags : Tiruchengode , Thiruchengode ,chickens ,Dogs ,poison, police investigation
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்