வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மர்மக் காய்ச்சல் வேகமாக பரவும் பகுதிகளில் துரித நடவடிக்கை குழுக்களை நியமித்து கண்காணித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மழைக்காலத்தில் டெங்கு, சிக்கன்குன்யா உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மழைக்காலம் தொடங்கிவிட்டதால் வேலூர் மாவட்டத்தில் ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பாதித்த பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் கூறுகையில், ‘டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக, 20 கொசு ஒழிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு சுகாதாரப்பணிகள் நடந்து வருகிறது. வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு தாலுகா மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக தனி வார்டுகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது’ என்றார்.