இஸ்லாமாபாத்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பயணிக்கும் விமானம், தனது நாட்டின் வழியாக செல்வதற்கு அனுமதி மறுத்துள்ளது.காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியா உடனான தூதரக உறவை முறித்து கொண்ட பாகிஸ்தான், ரயில், பேருந்து சேவைகளை நிறுத்தியது. மேலும், பாகிஸ்தானில் உள்ள முக்கிய வான்வழிகளில் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் விமானங்கள் பறக்கவும் தடை விதித்துள்ளது.
இதற்கிடையே, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுக்கு நாளை அரசுமுறைப் பயணம் செல்ல இருக்கிறார். இப்பயணத்தின் போது, அவர் அந்நாட்டு தலைவர்களுடன், புல்வாமா தாக்குதல் உள்பட இந்தாண்டு நடந்த வன்முறை தாக்குதல்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில், அவரது விமானம் பாகிஸ்தான் வான்வழியாக செல்ல, மத்திய வெளியுறவு அமைச்சகம் பாகிஸ்தான் அரசின் அனுமதி கோரியது.
இது தொடர்பாக, தேசிய தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது ஷா குரேஷி கூறுகையில், ``காஷ்மீர் விவகாரத்தில் இருநாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவுவதால், இந்திய ஜனாதிபதி பயணிக்கும் விமானம் எங்கள் நாட்டு வான்வழியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் அளித்துள்ளார்,’’ என்று கூறினார்.காஷ்மீர் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பிப்ரவரி 26ம் தேதி பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் அதனுடைய வான்வழியை பயன்படுத்த தடை விதித்தது. இந்த கட்டுப்பாடு கடந்த மார்ச் மாதத்துக்கு பின்னர், குறிப்பிட்ட சில வழித்தடங்களில் தளர்த்தப்பட்ட போதிலும், இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து வருகிறது.