புதுடெல்லி: விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விவிஐபிக்களின் பயணத்துக்காக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இதில் பலருக்கு கமிஷன் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் என்பவர் துபாயில் இருந்து இந்தியா கொண்டு வரப்பட்டார். இவரை அமலாக்கத் துறை கடந்தாண்டு டிசம்பர் 22ம் தேதி கைது செய்து வழக்கு பதிவு செய்தது. இவர் மீது சிபிஐயும் வழக்கு பதிந்தது. நீதிமன்ற காவலில் உள்ள கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமீன் கேட்டு டெல்லி நீதிமன்றத்தில் மனு செய்தார். இதை நேற்று விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார், கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.