புதுடெல்லி: ‘சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் இடமாற்றத்தை வழக்கமான ஒன்றாக கருத முடியாது,’ என பிருந்தா கரத் கூறியுள்ளார். இது குறித்து மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா கரத் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:நீதிபதி தஹில் ரமானியை இடமாற்றம் செய்ததும், அதை தொடர்ந்து அவர் ராஜினாமா செய்ததும் அதிர்ச்சி அளிக்கிறது. நாட்டில் பெண் நீதிபதிகள் ஒரு சிலர்தான் உள்ளனர். அவர்கள் இந்த மாதிரி நிலையை சந்திப்பது நீதிபதி தஹில் ரமானியை மட்டுமின்றி, ஒட்டு மொத்த பெண்களையும் அவமதிப்பது போன்றது. உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகளில் அவரும் ஒருவர்.
அவர் மீது இதுவரை எந்த குற்றச்சாட்டும் இல்லை. 75 நீதிபதிகள் உள்ள சென்னை உயர்நீ திமன்றத்தில் இருந்து, 2 நீதிபதிகள் மட்டும் இருக்கும் மேகாலாயா உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியை மாற்றுவதை வழக்கமான செயலாக கருத முடியாது. இது பதவியிறக்கம். ஒட்டு மொத்த சம்பவங்களை பார்க்கும்போது, நீதித்துறை நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் திருப்தி அளிக்காத நிலையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.