×

அம்பேத்கர் குறித்து கருத்து சிபிஎஸ்இ புத்தகத்தை தீயிட்டு கொளுத்துவோம்: காங்கிரஸ் ஆவேசம்

சென்னை:‘அம்பேத்கர் குறித்த கருத்தை 6 வகுப்பு பாடப் புத்தகத்திலிருந்து நீக்காவிட்டால், அப்புத்தகத்தை தீயிட்டு கொளுத்துகிற போராட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்தும்’ என அக்கட்சியின் தமிழ்நாடு செயல் தலைவர் ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார்.  
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவரும், மக்களவை உறுப்பினருமான கே.ஜெயக்குமார் விடுத்துள்ள அறிக்கை:இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தையாக கருதப்படுகிற அம்பேத்கர் குறித்து இழிவான கருத்துக்கள் மத்திய இடைநிலை கல்வி வாரிய ஆறாம் வகுப்பு சமூகவியல் பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில்  மத்திய இடைநிலை கல்வி வாரிய வகுப்புகளுக்கான பாட புத்தகங்களில் அம்பேத்கர் எந்த ஜாதியை சேர்ந்தவர் என்று கேள்வி எழுப்பப்பட்டு, அதற்கு தலித் என்று பதிலாக கூறப்பட்டுள்ளது. அதேபோல, தலித் என்றால் யார்? என்ற கேள்விக்கு  தீண்டத்தகாதவர் என்று பதிலாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் வர்ணாசிரமப்படி உள்ள முக்கிய ஜாதிகள் எது என்ற கேள்விக்கும், ‘பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள்” என்று பதிலாக  வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.  இத்தகைய விஷமத்தனமான வர்ணாசிரம வேறுபாட்டை வலியுறுத்துகிற கருத்துக்கள் இடம் பெறுகிற வகையில் பாடப் புத்தகங்களை யார் தயாரிக்கிறார்கள்?, பாடப் புத்தகங்களை தயாரிக்கிற தேசிய கல்வி  ஆராய்ச்சி கவுன்சிலுக்கு இத்தகைய கருத்துக்களை இடம் பெறச் செய்வதற்கு யார் அதிகாரம் அளித்தது?, இதையெல்லாம் கட்டுப்படுத்துகிற அதிகாரம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கு இருக்கிறதா,? இல்லையா ? இவரது  அனுமதியும், ஒப்புதலும் இல்லாமல் இத்தகைய கருத்துக்கள் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் இடம் பெறுமா?, 6 ஆம் வகுப்பு படிக்கிற இளம் மாணவர்களிடையே இத்தகைய நச்சுக் கருத்துக்களை இடம் பெற வைப்பதன் மூலம் இளைய  சமுதாயத்தினரை எந்த பாதையில் அழைத்துச் செல்ல பாஜ அரசு முனைகிறது ? இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : CBSE ,Ambedkar ,Congress , Comment , Ambedkar, CBSE book, Congress agitation
× RELATED குள்ளஞ்சாவடி அருகே நள்ளிரவில்...