×

விஞ்ஞானிகளால் பெருமை: எடப்பாடி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சந்திரயான்-2 மூலம் விஞ்ஞானிகளுக்கு முதல்கட்ட வெற்றி கிடைத்திருப்பதாகவும் சோதனைகளை சாதனைகளாக்க வேண்டும் என்றும் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி:   சந்திரயான்- 2 விண்கலத்தை ஏவும் திட்டத்திற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட இஸ்ரோவின் தலைவர், விஞ்ஞானிகள், பொறியாளர்கள் உள்ளிட்ட அனைவரது முயற்சியும், உழைப்பும் மிகவும் பாராட்டுக்குரியது. இத்திட்டத்தில் மட்டுமல்லாமல் மேலும் பல திட்டங்களிலும் கண்டிப்பாக  பல வெற்றிகள் பெறுவார்கள். அவர்கள் புதுநம்பிக்கையுடனும் ஊக்கத்துடனும் செயல்பட்டு வெற்றிகள் பல பெற  என் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும் மனதார வாழ்த்துகிறேன்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: இஸ்ரோ விஞ்ஞானிகள் குறித்து பெருமை கொள்வோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்து திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு: கோடிக்கணக்கான மக்களை விண்வெளி நோக்கி பார்க்கவும், அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தின் ஆற்றல் மீது நம்பிக்கை வைக்கவும் ஊக்கமளித்த இஸ்ரோ குழுவினருக்கு நன்றி!. முன்பைவிட நம்மை ஒருபடி முன்னே கொண்டு சென்றதற்காக நம்முடைய விஞ்ஞானிகள் குறித்து பெருமை கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதேபோல், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வைகோ, ராமதாஸ், ஜி.கே.வாசன்,  அன்புமணி , டிடிவி.தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நிலவில் சாதிக்க துடிக்கும் நான்காவது நாடு எது?
சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தரையிறக்கும்போது அதிலிருந்து சிக்னல் கிடைக்காத நிலையில், நிலவில் 4வதாக எந்த நாடு லேண்டரை தரையிறக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.ரஷ்யா சோவியத் யூனியனாக இருந்தபோது, 1959ம் ஆண்டு லூனா 2 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. இதுவே நிலவில் தரையிறங்கிய முதல் விண்கலம். அதை தொடர்ந்து, அமெரிக்கா ரேஞ்சர் 7 என்ற விண்கலத்தை நிலவில் தரையிறக்கியது. இது நிலவின் தரைப்பகுதியை புகைப்படம் எடுத்து அனுப்பியது. இதற்கு அடுத்தபடியாக 2013ம் ஆண்டு, சீனாவின் சாங்க் இ 3 விண்கலம் தன்னுடைய லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கியது. இந்த மூன்று நாடுகளே இதுவரை வெற்றிகரமாக நிலவில் லேண்டர்களை தரையிறக்கிய நாடுகள் என்ற பெயர் பெற்றுள்ளன.  4வது நாடாக நிலவில் கால்பதிக்க உலகின் பல்வேறு நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்தியா, இஸ்ரேல், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் உள்பட பல்வேறு நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் தோல்வி
சந்திரயான்-2ன் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் தகவல் தொடர்பு சிக்னல் கிடைக்காத நிலையில், அதேபோல் இதுவரை இரண்டு நாடுகளின் லேண்டர்களின் தகவல் தொடர்பு சிக்னல் கிடைக்காமல் போய் உள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பெரிசீட் என்ற லேண்டரை இஸ்ரேல் நிலவுக்கு அனுப்பியது. ஆனால் லேண்டர் நிலவில் தரையிறக்கும் முயற்சியில் லேண்டரில் உள்ள ராக்கெட்டின் மெயின் இன்ஜின் வேலை செய்யவில்லை. பெரிசீட் லேண்டர் நிலவின் ஈர்ப்பு விசையின் காரணமாக, நிலவின் தரைப்பகுதியில் மோதி செயலிழந்துவிட்டது. இதேபோல, அமெரிக்காவின் சர்வேயர் 4 விண்கலத்தின் லேண்டர் செயலிழந்தது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு பத்திரிகைகள் கருத்து
சந்திரயான்- 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்க முயன்றபோது தகவல் தொடர்பு துண்டானது. இது பற்றி  வெளிநாட்டு பத்திரிகைகள் பல்வேறு செய்திகளை வெளியிட்டுள்ளன. நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் கார்டியன் ஆகிய பத்திரிகைகள் இருவிதமான கருத்துக்களை தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒயர்ட் என்ற பத்திரிகையில், `இந்தியாவின்  மிக விருப்பமான விண்வெளி திட்டம் இன்னும் நிறைவேறவில்லை. நிலவுக்கு சென்ற விக்ரம் லேண்டர் தரையிறங்கும் முயற்சி தோல்வி அடைந்தது, இந்தியாவின் விண்வெளி திட்டத்திற்கு கிடைத்த பலத்த அடி. ஆனால், இந்த திட்டம் முழுவதுமாக இழப்புக்கு உள்ளாகவில்லை’ என குறிப்பிட்டுள்ளது.நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், சந்திரயான் 2 திட்டம் முழுவதுமாக தோல்வி அடையவில்லை. அதன் ஆர்ப்பிட்டர் இன்னும் செயல்பாட்டில் உள்ளது. இதனால், நிலவில் இறங்கிய நாடுகள் பட்டியலில் இந்தியாவால் இணைய முடியவில்லை என கூறப்பட்டுள்ளது.

பிரிட்டன் பத்திரிகையான  தி கார்டியன் வெளியிட்டுள்ள செய்தியில்,  தொலைத்தொடர்பு இணைப்பு துண்டிப்பால் நிலவில் இறங்கும் இந்தியாவின் முயற்சி பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அடுத்த இருபது முதல் 100 ஆண்டுகளில் மனிதர்களை நிலவில் குடியேற செய்யும் முயற்சி வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. சந்திரயான் 2 குறித்து பிபிசி `மிக மலிவானது’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் தினசரி  லீ மான்டே வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய விஞ்ஞானிகளின் 45 சதவீத முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

60 ஆண்டுகளில் 40 சதவீத தோல்வி: நாசா தகவல்
சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவின் தரைப்பகுதியை நேற்று அதிகாலை நெருங்கிய நிலையில், அதனுடன் இருந்த சிக்னல் துண்டிக்கப்பட்டது. இந்தியா மட்டும் அல்ல, நிலவை பற்றி ஆராய முயன்ற பல்வேறு உலக நாடுகளின் ஆராய்ச்சி முழு வெற்றி பெறவில்லை. இந்தாண்டு இஸ்ரேல் மேற்கொண்ட நிலவு ஆராய்ச்சி திட்டமான ‘பெரிஷீட்’ தோல்வியில்தான் முடிந்தது. அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசாவிடம் உள்ள நிலவை பற்றி ஆராய்ச்சி பட்டியலை பார்த்தால், கடந்த 60 ஆண்டுகளாக நடந்த நிலவு ஆராய்ச்சியில் 60 சதவீதம் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. 40 சதவீதம் தோல்விதான். 109 நிலவு ஆராய்ச்சி திட்டங்களில், 61 திட்டங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  

அடுத்த முறை வெற்றி
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள செய்தியில், ‘நாம் 3.84 லட்சம் கி.மீ பயணத்தை வெற்றிகரமாக முடித்தோம். 2.1 கி.மீ தூரம்தான் பாக்கி. இதுவே பெரிய சாதனை. இது தற்செயலாக நடைபெறும் சம்பவம், துரதிர்ஷ்டம் அல்ல. நிலவை பற்றிய அடுத்த ஆராய்ச்சியில் நாம் வெற்றி பெறுவோம்,’ என குறிப்பிட்டுள்ளார்.

130 கோடி இந்தியர்கள் நம்பிக்கை இழக்கவில்லை
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘நம்பிக்கையிழக்க ஒன்றும் இல்லை. விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பை மட்டும்தான் இஸ்ரோ இழந்துள்ளது. 130 கோடி இந்தியர்களின் நம்பிக்கையை இழக்கவில்லை. சந்திரயான்-2 ஆர்ப்பிட்டர் நிலவை வெற்றிகரமாக சுற்றிக் கொண்டிருக்கிறது. இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளர்கள், சந்திரயான்-2 திட்டத்தில் கடுமையாக உழைத்த அனைவரையும் வணங்குகிறேன். எதிர்கால திட்டங்களில் வெற்றி பெற வாழ்த்துக்கள்,’ என்றார்.

அமெரிக்காவின் தோல்வி
சந்திரயான்-2ன் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் தகவல் தொடர்பு சிக்னல் கிடைக்காத நிலையில், அதேபோல் இதுவரை இரண்டு நாடுகளின் லேண்டர்களின் தகவல் தொடர்பு சிக்னல் கிடைக்காமல் போய் உள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பெரிசீட் என்ற லேண்டரை இஸ்ரேல் நிலவுக்கு அனுப்பியது. ஆனால் லேண்டர் நிலவில் தரையிறக்கும் முயற்சியில் லேண்டரில் உள்ள ராக்கெட்டின் மெயின் இன்ஜின் வேலை செய்யவில்லை. பெரிசீட் லேண்டர் நிலவின் ஈர்ப்பு விசையின் காரணமாக, நிலவின் தரைப்பகுதியில் மோதி செயலிழந்துவிட்டது. இதேபோல, அமெரிக்காவின் சர்வேயர் 4 விண்கலத்தின் லேண்டர் செயலிழந்தது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு பத்திரிகைகள் கருத்து
சந்திரயான்- 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்க முயன்றபோது தகவல் தொடர்பு துண்டானது. இது பற்றி  வெளிநாட்டு பத்திரிகைகள் பல்வேறு செய்திகளை வெளியிட்டுள்ளன. நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் கார்டியன் ஆகிய பத்திரிகைகள் இருவிதமான கருத்துக்களை தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒயர்ட் என்ற பத்திரிகையில், இந்தியாவின்  மிக விருப்பமான விண்வெளி திட்டம் இன்னும் நிறைவேறவில்லை. நிலவுக்கு சென்ற விக்ரம் லேண்டர் தரையிறங்கும் முயற்சி தோல்வி அடைந்தது, இந்தியாவின் விண்வெளி திட்டத்திற்கு கிடைத்த பலத்த அடி. ஆனால், இந்த திட்டம் முழுவதுமாக இழப்புக்கு உள்ளாகவில்லை’ என குறிப்பிட்டுள்ளது.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், சந்திரயான் 2 திட்டம் முழுவதுமாக தோல்வி அடையவில்லை. அதன் ஆர்ப்பிட்டர் இன்னும் செயல்பாட்டில் உள்ளது. இதனால், நிலவில் இறங்கிய நாடுகள் பட்டியலில் இந்தியாவால் இணைய முடியவில்லை என கூறப்பட்டுள்ளது. பிரிட்டன் பத்திரிகையான  தி கார்டியன் வெளியிட்டுள்ள செய்தியில்,  தொலைத்தொடர்பு இணைப்பு துண்டிப்பால் நிலவில் இறங்கும் இந்தியாவின் முயற்சி பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அடுத்த இருபது முதல் 100 ஆண்டுகளில் மனிதர்களை நிலவில் குடியேற செய்யும் முயற்சி வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.சந்திரயான் 2 குறித்து பிபிசி `மிக மலிவானது’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் தினசரி  லீ மான்டே வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய விஞ்ஞானிகளின் 45 சதவீத முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ஜூன் 12: நிலவுக்கு சந்திரயான்- 2விண்கலம் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் கே.சிவன் அறிவித்தார்.
ஜூன் 29: அனைத்து சோதனைகளும் முடிந்ததை தொடர்ந்து விக்ரம் லேண்டருடன் ரோவர்  இணைக்கப்பட்டது.
ஜூலை 4: நிலவுக்கு செலுத்தப்படும் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டில் சந்திரயான் விண்கலம் பொருத்தப்பட்டது.
ஜூலை 7: ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட், ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஜூலை 14: ராக்கெட்டை ஏவுவதற்கான கவுன்ட் டவுன் தொடங்கியது.
ஜூலை 15: தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ஏவுவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக சந்திரயான்- 2 திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
ஜூலை 18: சந்திரயான் 2 விண்கலத்தை ஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஜூலை 22ல் ஏவப்படும் என மறுஅறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஜூலை 21: ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டை ஏவுவதற்கான கவுன்ட் டவுன் தொடங்கியது
ஜூலை 22:ஜிஎஸ்எல்வி மார்க் 3 மூலம் சந்திரயான் விண்கலம் நிலவுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது.
ஜூலை 24: புவியின் முதல் சுற்று வட்டப்பாதையில் சந்திரயான் 2 உயர்த்தப்பட்டது.
ஜூலை 26: புவியின் 2வது சுற்று வட்டப் பாதைக்கு சந்திரயான் 2 உயர்த்தப்படுதல்.
ஜூலை 29: புவிவின் 3வது சுற்று வட்டப்பாதைக்கு சந்திரயான் 2 உயர்த்தப்படுதல்.
ஆகஸ்ட் 2: புவியின் 4வது சுற்று வட்டப்பாதைக்கு சந்திரயான் 2 உயர்த்தப்பட்டது.
ஆகஸ்ட் 4: சந்திரயான் 2 விண்கலம் புவியின் மேற்பரப்பை எடுத்த முதல் தொகுதி புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டது.
ஆகஸ்ட் 6: புவியின் 6 வது சுற்றுவட்டப்பாதைக்கு சந்திரயான்  விண்கலம் உயர்த்தப்பட்டது.
ஆகஸ்ட் 14: நிலவின் மாற்று வட்டப்பாதையில் சந்திரயான் 2 வெற்றிகரமாக நுழைந்தது.
ஆகஸ்ட் 20: நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான் 2 நுழைந்தது.
ஆகஸ்ட் 21: நிலவின் 2வது சுற்றுவட்டப்பாதைக்கு சந்திரயான் உயர்த்தப்பட்டது.
ஆகஸ்ட் 22: நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் எடுத்த முதல் தொகுதி புகைப்படம் இஸ்ரோவால் வெளியிடப்பட்டது.
ஆகஸ்ட் 26: நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் எடுத்த 2வது தொகுதி புகைப்படம் வெளியிடப்பட்டது.
ஆகஸ்ட் 28: நிலவின் 3 வது சுற்றுவட்டப் பாதைக்கு சந்திரயான் உயர்த்தப்பட்டது.
ஆகஸ்ட் 30: நிலவின் 4வது சுற்று வட்டப்பாதைக்கு சந்திரயான்  உயர்த்தப்பட்டது.
செப்.1: நிலவின் இறுதி சுற்றுவட்டப் பாதைக்கு சந்திரயான் உயர்த்தப்பட்டது.
செப் 2: ஆர்ப்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது.
செப்.3: நிலவுக்கு அருகே விக்ரம் லேண்டர் சென்றது.
செப்.7: நிலவில் தரையிறங்க 2.1 கிமீ தொலைவு இருந்தபோது விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு துண்டானது.


Tags : scientists ,greetings ,Edappadi ,MK Stalin , Proud,scientists, Edappadi, greetings, MK Stalin
× RELATED கச்சா எண்ணெய் விலை குறைந்தும்...