இந்திய வாகன சந்தையின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக மின் வாகனங்கள் மாறியுள்ளன. அதன் அடிப்படையில் ஹூண்டாய் நிறுவனம், ‘’கோனா’’ எலெக்ட்ரிக் காரை தொடர்ந்து, தற்போது ஸ்கேட்டர் ரக ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. நகரவாசிகள் பயன்படுத்துகிற வகையிலான, இந்த ஸ்கேட்டர் ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டரின் சிறப்பம்சம் என்னவென்றால், இதனை எதிர்கால ஹூண்டாய் மற்றும் அதன் ஓர் அங்கமாக செயல்படும் கியா நிறுவனங்களின் கார்களில் பொருத்த முடியும். இதற்கான பிரத்யேக இடத்தை இவ்விரு நிறுவனங்களும் ஒதுக்க இருக்கின்றன.அதேசமயம், இந்த இடத்தில் ஹூண்டாய் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொருத்தும்போது, அந்த இடத்திலேயே அதனை சார்ஜ் செய்துகொள்ள ஏதுவான இடம் (சார்ஜர் போர்ட்) நிறுவப்பட உள்ளது. மேலும், கார் சாலையில் இயங்கும்போது, அதிலிருந்து கிடைக்கும் திறனை வைத்து மின்சாரம் தயாரிக்கப்பட்டு, அதைக்கொண்டு சார்ஜ் செய்யும் வசதி இதற்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட உள்ளது.
அதனால், இந்த இ-ஸ்கூட்டரை வாங்குபவர்கள் இதற்கென தனியாக செலவு செய்து சார்ஜ் செய்யவேண்டிய அவசியம் இல்லை. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சிஇஎஸ் 2017 என்ற பெயரில் ஹூண்டாய் நிறுவனம் முன்னதாக உலகளாவிய அளவில் அறிமுகம் செய்திருந்தது. இதனை, தற்போது விற்பனைக்கு தயாராக்கியுள்ளது. இந்த ஸ்கூட்டரில் மிக சிறந்த அம்சமாக சஸ்பென்ஷன் காணப்படுகிறது. இது, முன்பக்க வீலுடன் பொருத்தப்பட்டுள்ளது. பள்ளம் மேடுகள் நிறைந்த சாலையில் பயணிக்கும்போது அசவுகரியத்தை உணராத வண்ணம், இது பயண அனுபவத்தை நமக்கு வழங்கும்.முன்னதாக, கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், முன்பக்க வீல் இயங்கும் திறன் கொண்டதாக இருந்தது. ஆனால், தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாடலில், பின்பக்க வீல் இயங்கும் திறனைக் கொண்டுள்ளது. வாகனத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் ஒட்டுமொத்த பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை ஹூண்டாய் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 10.5Ah லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 20 கி.மீ தூரம் வரை பயணிக்கலாம். அதேசமயம், இதன் டாப் ஸ்பீட் மணிக்கு 20 கிமீ ஆகும். இந்த புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நகர பயன்பாட்டிற்காக ஹூண்டாய் நிறுவனம் தயாரித்திருந்தாலும், அனைத்து இடங்களையும் இணைக்கிற வகையிலான சிறப்பம்சங்களை இது பெற்றுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், இந்திய வருகை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.