×

நிலவில் மாயமான விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி: சந்திரயான்-2 ஆர்பிட்டர் மூலம் முழுவீச்சில் ஆய்வு

பெங்களூரு: நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவின் மேற்பரப்பில் நேற்று அதிகாலை தரையிறங்கும் போது அதன் சிக்னல் கடைசி ேநரத்தில் துண்டானது. அதை தொடர்பு கொள்ள  இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மாயமான விக்ரம் லேண்டரை, நிலவை சுற்றிக் கொண்டிருக்கும் சந்திரயான்-2 ஆர்பிட்டர் மூலம் கண்டறியும் பணி முழுவீச்சில் நடக்கிறது. நிலவை பற்றி ஆய்வதற்காக, சந்திரயான்-1 விண்கலம் கடந்த 2008ம் ஆண்டு அனுப்பப்பட்டது. இதன் ஆர்பிட்டர் செயற்கைகோள் நிலவின் சுற்றுவட்டபாதையை வெற்றிகரமாக சென்றடைந்து படங்களை எடுத்து அனுப்பியது. இதனால், நிலவில்  ஆய்வுக்கலத்தை தரையிறக்கும் சந்திரயான்-2 திட்டத்துக்கு கடந்த 2008ம் ஆண்டே அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சியில் சந்திரயான்-2 விண்கலம் உருவாக்கப்பட்டது.  இதில், நிலவை சுற்றும் ஆர்பிட்டர், நிலவில் தரையிறங்கும் ‘விக்ரம்’ லேண்டர், நிலவின் மேற்பரப்பில் ஆய்வு மேற்கொள்ளும் ‘பிரக்யான்’ என்ற ரோபோ வாகனம் ஆகிய 3 முக்கிய பாகங்கள் இடம் பெற்றிருந்தன. இவைகள் ஒன்றாக  இணைக்கப்பட்டு ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஆந்திராவின் ஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து கடந்த ஜூலை 22ம் தேதி வெற்றிகரமாக அனுப்பப்பட்டது. இத்திட்டத்துக்காக மொத்தம் ரூ.978 கோடி செலவிடப்பட்டது.

புவி சுற்றுவட்டப்பாதையை சென்றடைந்த சந்திரயான்-2 விண்கலம், படிப்படியாக ஒவ்வொரு சுற்றுவட்டபாதையாக உயர்த்தப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி நிலவின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நுழைக்கப்பட்டது. நிலவை சுற்றி வந்த  ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் கடந்த 2ம் தேதி வெற்றிகரமாக பிரிந்தது. இதை நேற்று அதிகாலை 1.30 மணி முதல் 2.30  மணிக்குள் நிலவின் தென் துருவத்தில்  உள்ள மான்சினஸ்-சி,  சிம்பேலியஸ்-என் ஆகிய இரு பள்ளங்களுக்கு  இடையே அமைந்துள்ள சமவெளியில் தரையிறக்க  விஞ்ஞானிகள் திட்டமிட்டனர். உலகத்திலேயே முதல் முறையாக நிலவின் தென்  துருவத்தில் ேலண்டரை தரை இறக்கும் வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்வை காண  பிரதமர் மோடி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு நேற்று முன்தினம் இரவு  வந்தார்.  அவருடன், தேர்வு செய்யப்பட்ட 60 இந்திய மாணவர்கள் இஸ்ரோவின்  சரித்திர சாதனையை இஸ்ரோ மையத்தில் இருந்தபடி பார்த்து  கொண்டிருந்தனர்.நிலவில் தரை இறங்கும் முன்பாக லேண்டரில்  இருந்த அதிநவீன கதிர்வீச்சு கருவிகள் நிலவின் தரை இறங்கும் பகுதியை  தெளிவாக ஆய்வு செய்தது. தொடர்ந்து, அதிகாலை 1.38 மணி முதல் விக்ரம்  லேண்டரை தரையில் இறக்கும் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடங்கினர்.  விக்ரம் லேண்டரின் வேகத்தை குறைத்து பூஜ்ய நிலைக்கு கொண்டுவரும்  பணிகளை  மேற்கொண்டனர். தென் துருவத்தில் விக்ரம் லேண்டரை தரை இறக்க  முயன்ற கடைசி 15 நிமிடங்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மிகவும் சவாலாக  இருந்தது. இந்த 15 நிமிடங்கள், லேண்டரில் உள்ள இன்ஜின்கள் தானாகவே இயங்கக்  கூடியவை.  அதில் முதல் 11 நிமிடங்கள் மிகச் சரியாக தரை இறக்கும் பணிகள் நடந்தன.

மீதம்  உள்ள 4 நிமிடங்கள் மட்டுமே உள்ள நிலையில், சரியாக அதிகாலை 1.58 மணி  அளவில், நிலவில் இருந்து 2.1 கிலோ மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டர்  இருக்கும் போது அதனுடன் இருந்த சிக்னலை இஸ்ரோவின் தரை  கட்டுப்பாட்டு மையம் திடீரென இழந்தது. இதனைத்  தொடர்ந்து விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்தனர். அனைவரின் முகத்திலும்  கவலை படர்ந்தது.உடனடியாக இஸ்ரோ தலைவர் சிவன் பிரதமர்  மோடியிடம் நிலைமை குறித்து எடுத்துக் கூறினார். இதையடுத்து,  பிரதமர் மோடி அங்கிருந்து வெளியேறியதால் அனைவரின் முகத்திலும்  சோகம் காணப்பட்டது.இதனைத் தொடர்ந்து விக்ரம் லேண்டருக்கு  என்ன ஆனது என்று தெரியாத நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி  அளித்தார். அவர் கூறுகையில், “நிலவின் தரைப்பகுதியில் இருந்து 2.1  கிலோ மீட்டர் உயரத்தில் விக்ரம் லேண்டர்  இருந்தபோது சிக்னல்  துண்டிக்கப்பட்டது. சிக்னலை மீட்க அனைத்து முயற்சிகளும் தீவிரமாக  மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” என்றார்.விக்ரம் லேண்டரின் சிக்னல்  துண்டிக்கப்பட்டாலும், நிலவை சுற்றிக் கொண்டிருக்கும் சந்திரயான்-2  விண்கலத்தின் ஆர்பிட்டர் நல்ல நிலையில் உள்ளது. அதில் உள்ள சக்தி வாய்ந்த  கேமிராக்கள் மூலம், மாயமான விக்ரம் லேண்டரை கண்டறியும் முயற்சியில் இஸ்ரோ  விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், விக்ரம் லேண்டருக்கும் தொடர்ந்து சிக்னல்கள் அனுப்பப்பட்டு வருகிறது.  விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டது மட்டுமின்றி, அதனுடன் இருந்த தொடர்பை இழந்ததும் சந்திரயான்-2 திட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

‘ஒரு வாரத்தில் கண்டுபிடிப்போம்’
விக்ரம் லேண்டரை ேநாக்கி தொடர்ந்து சிக்னல்கள் அனுப்பப்பட்டு வருகிறது. அதேபோல், நிலவின் தென்பகுதியில் சுற்றி வரும் ஆர்பிட்டர், நிலவை படம் பிடிக்கும். அப்போது, விக்ரம் லேண்டர் எங்கே உள்ளது என்று தெரியவரும். விக்ரம்  லேண்டரில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவில் சில லேசர் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், இந்த விண்வெளி திட்டம் நாசாவுக்கும் மிக முக்கியமானது என்பதால், விக்ரம் லேண்டரை தேட அது முடிவு  செய்துள்ளது. இதற்காக, ஏற்கனவே நிலவின் தென்பகுதியை சுற்றி வரும் செயற்கைக்கோள்கள் மூலம், விக்ரம் லேண்டருடன் தொடர்பு துண்டிக்கப்பட்ட பகுதிகள் புகைப்படங்கள் எடுக்கப்பட உள்ளன. அதன் மூலம், அடுத்த ஒரு வாரத்தில்  விக்ரம் லேண்டர் இருக்குமிடத்தை கண்டுபிடித்து விடுவோம் என நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

‘வெற்றி பெறுவோம்’
சந்திரயான்-1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில், “ஏற்கனவே நிலவை பற்றிய  உண்மைகளை உலகிற்கு அறிவித்துள்ளோம். தண்ணீர் இருப்பதை கண்டறிந்த  சந்திரயான்-1 வெற்றி அடைந்தது. அதே வரிசையில்  சந்திரயான்-2 சரியான இலக்கை  அடைந்துள்ளது. நிலவு பயணத்தில் உறுதியாக நமக்கு வெற்றி கிடைக்கும். அதற்கான  திறன் நம்மிடம் இருக்கிறது,’’ என்றார்.

மாணவர் கேள்விக்கு மோடி சுவாரசிய பதில்
சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர், நிலவில்  தரையிறங்கும் காட்சியை பார்க்க, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்துக்கு பிரதமர் மோடி வந்தார். அவருடன் அமர்ந்து இந்த நிகழ்வை பார்க்க, விநாடி வினா மூலம் தேர்வு செய்யப்பட்ட 60 இந்திய மாணவ, மாணவிகளும், பூடானை சேர்ந்த மாணவர்களும் வந்திருந்தனர். அவர்களுடன் மோடி கலந்துரையாடினார். அப்போது ஒரு மாணவன்,  ‘நான் ஜனாதிபதியாக என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டான். அதற்கு சிரித்தபடியே பதில் அளித்த மோடி, `‘ஏன் நீங்கள் பிரதமராகக் கூடாது?’’ என்று கேட்டார்.அதற்கு அந்த மாணவர், `ஜனாதிபதி ஆவதே எனது இலட்சியம். எனவே, நான் என்ன செய்தால் ஜனாதிபதியாக முடியும் என கூறுங்கள்,’ என்றார். இதற்கு மோடி ``வாழ்வில் மிகப்பெரிய இலக்கை குறிக்கோளாக கொள்ளுங்கள். அதை சிறுசிறு பகுதிகளாக பிரித்துக் கொள்ளுங்கள். அதை சிறிது சிறிதாக அடைய முயற்சி ெசய்யுங்கள். ஏமாற்றத்தை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். நீங்கள்  தவற விட்டதை மறந்து விடுங்கள்,’’ என்று பதிலளித்தார்.

இன்னும் சிறப்பாக சாதிப்போம்: மோடி
விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறிவிட்டு சென்றார். பின் நேற்று காலை மீண்டும் வந்து அவர்களிடம் நீண்ட நேரம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:நாம் அடைய நினைத்த இலக்கு எளிதானது அல்ல. நாம் அனைவரும் நாட்டிற்காக  பணியாற்றி கொண்டிருக்கிறோம். வாழ்க்கை என்றால் மேடு, பள்ளம்  இருக்கத்தான் செய்யும். உங்கள் முகத்தில் உள்ள சோகத்தை நான் உணர்ந்தேன்.  அதனால்தான், நான் அதிகாலை பொழுதில் உங்களுடன் நீண்ட நேரம் இருக்கவில்லை. நான் உங்களை மீண்டும் சந்தித்து பேச முடிவு செய்தது உங்களுக்கு போதனைகள் வழங்க அல்ல, உற்சாகப்படுத்தத்தான்.

சந்திரயான்-2 திட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவால், இஸ்ரோ விஞ்ஞானிகள் மனம் உடையக் கூடாது. நிலவுக்கு மிக அருகில் நாம் சென்று விட்டோம். வரும் காலங்களில் மீதமுள்ள இடத்தை நாம் அடைய வேண்டும். இன்று நாம் கற்று  கொண்ட பாடம், நாளை நம்மை மேலும் வலுப்படுத்தும். அறிவியலில் எப்போதும் தோல்வி இல்லை. அதில் எப்போதும் சோதனைகள், முயற்சிகள் மட்டுமே இருக்கும். நமது விண்வெளி திட்டங்களாலும், நமது விஞ்ஞானிகளாலும் நாடு பெருமை அடைகிறது. விண்வெளி திட்டத்தில் நாம் இன்னும்  சிறப்பானதை சாதிக்க உள்ளோம். புதிய விடியல், பிரகாசமான நாள் விரைவில் ஏற்படும். நாடு எப்போதும் உங்களுடன் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : scientists ,ISRO ,moon ,Vikram Lander , Contact , magical ,Vikram Lander , full-scale ,orbiter
× RELATED இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம்...