திட்டக்குடி: திட்டக்குடியில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சிக்குட்பட்ட வதிஷ்டபுரம் 13வது வார்டு கீழவீதியில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் கீழே இறங்கியதால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக வார்டு எண் 13ல் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யவில்லை. மேலும், லாரிகள் மூலமும் தண்ணீர் வழங்கவில்லை. பல இடங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை நீடிக்கிறது. இதனால் காலையில் குழந்தைகள் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கு அனுப்ப முடியாமலும், பொதுமக்கள் ேவலைக்கு செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஆவேசமடைந்த அந்தபகுதி பெண்கள் திடீரென திட்டக்குடி- விருத்தாசலம் மாநில நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த திட்டக்குடி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் பெண்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரை நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.