×

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மெட்ரோ ரயில் பெட்டி: பிரதமர் நரேந்திர மோடி பயணம்

மும்பை: மேக் இன் இந்தியா திட்டத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மெட்ரோ ரயில் பெட்டியை துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, அதில் பயணம் செய்தார். பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் இருந்து, சந்திரயான் 2 திட்டம் குறித்து பார்வையிட வந்திருந்த பிரதமர் மோடி, இன்று காலை இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் மனம் விட்டுப் பேசி ஆறுதல் கூறினார். பின்னர் காலை பெங்களுரில் இருந்து புறப்பட்டு மும்பைக்குச் சென்றார். மும்பை விமான நிலையத்தில் வந்திங்கிய அவரை, மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, முதல்வர் தேவேந்திர பட்நாவீஸ் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் மும்பை விலே பார்லேவில் உள்ள லோகமான்ய சேவா சங்க திலக் கோவிலில் சிறப்பு வழிபாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

தொடர்ந்து, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மெட்ரோ ரயில் பெட்டி இயக்கத்தை தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் மோடி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மெட்ரோ ரெயில் பெட்டியில் பயணம் செய்தார். அவருடன் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோரும் மெட்ரோவில் சென்றனர். அதை தொடர்ந்து மோடி, 19 ஆயிரம் கோடி செலவிலான 3 மெட்ரோ ரயில் பாதை திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த ரெயில் பாதை மும்பையில் 42 கிலோ மீட்டர் தூரத்துக்கும் அதிகமானது. இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இஸ்ரோ விஞ்ஞானிகளின் தைரியம் மற்றும் மன உறுதியைக் கண்டு தான் வியப்பு அடைந்ததாகவும், கடுமையான சவால்களையும் பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கி எவ்வாறு முன்னேறுவது என தான் அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டதாகவும் கூறினார்.


Tags : Narendra Modi ,India ,Mack , Make in India, Metro Rail, PM Modi, Mumbai
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...