×

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுந்தரேஸ்வரருக்கு இன்று பட்டாபிஷேகம்

மதுரை : மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில் சுந்தரேஸ்வரருக்கு இன்று பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில் பாணனுக்கு அங்கம் வெட்டிய திருவிளையாடல் நேற்று நடந்தது. இன்று (செப். 7) காலை 11 மணிக்கு இம்மையில் நன்மை தருவார் கோயிலில், சிவகங்கை எஸ்டேட் ஆவியூர் கட்டளை மண்டபத்தில் வளையல் விற்ற திருவிளையாடல் நடக்கிறது. தொடர்ந்து, இரவு 7.35 மணி முதல் 7.59 மணிக்குள் மீனாட்சி கோயில் சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.

 மதுரையில் சித்திரை முதல் ஆவணி வரை மீனாட்சி ஆட்சியும், ஆவணியில் இருந்து பங்குனி வரை சுவாமி சுந்தரேஸ்வரர் ஆட்சியும் நடைபெறுவதாக ஐதீகம். அதன்படி இன்று சுந்தரேஸ்வரர் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். சுந்தரேஸ்வரரிடம் இருந்து கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் செங்கோலைப் பெற்று சகல விருதுகளுடன் சுவாமி சன்னதி 2ம் பிரகாரம் வலம் வந்து சுந்தரேஸ்வரர் திருக்கரத்தில் சேர்ப்பார். இந்நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவர். நேற்று காலை கோயில் மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் பாணனுக்கு அங்கம் வெட்டிய திருவிளையாடல் நடந்தது.

பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை குறித்த வரலாற்றினை மீனாட்சி கோயில் பட்டர்கள் கூறும்போது, ‘‘குலோத்துங்க பாண்டியன் காலத்தில் பாணன் என்ற வயது முதிர்ந்த வாள்வித்தை ஆசிரியர் வாழ்ந்து வந்தார். அவரது சிஷ்யர்களில் சித்தன் என்னும் ஒருவன் மிகவும் தீய குணங்கள் கொண்டவன். பயிற்சி முடித்து சென்ற அவன், தானும் ஒரு பயிற்சி பள்ளி அமைத்து ஆசிரியரின் மாணவர்களையெல்லாம் அங்கு அழைத்துக் கொண்டான் அத்தோடு ஆசிரியர் பாணனின் மனைவியிடமும் தவறாக நடக்க முயற்சித்தான்.

மனம் வருந்திய பாணனின் மனைவி, இறைவன் சோமசுந்தரரிடம் அழுது முறையிட்டார். இறைவனும் ஆசிரியர் வேடம் தாங்கிச் சென்று சித்தனை வாள்போருக்கு அழைத்து, ஆசான் மனைவியை நினைத்த நெஞ்சையும், பேசிய நாக்கையும், தொட்ட கைகளையும், கண்ட கண்களையும், காத்துக் கொள் என்று கூறி ஒவ்வொரு அங்கமாக வெட்டி, இறுதியாக அவன் தலையையும், வெட்டிக் கொன்றார்’’ என்று தெரிவித்தனர். நேற்று மாலை 6 மணிக்கு கோயிலில் உள்ள யானை மகாலுக்கு முன்பு, திருஞானசம்பந்தர் சைவ சமயத்தை நிலைநிறுத்திய வரலாறு தல ஓதுவாரால் சொல்லப்பட்டது. தொடர்ந்து சுவாமி மற்றும் பிரியாவிடை தங்க ரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி ஆவணி மூல வீதிகளில் வலம் வந்தனர்.

Tags : Madurai Meenakshi Amman Temple , Madurai ,Meenakshi Amman Temple,Sundareshwarar ,Coronation
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...