சோளிங்கர்: வேலூர் மாவட்டம், சோளிங்கர் மையப்பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது.இங்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நகைகளை வாடிக்கையாளர்கள் மீட்க வந்தபோது, பலரது நகைகள் போலியாக இருந்ததும், சிலரது நகைகள் மாயமாகியிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, வங்கி நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டதில் நகை மதிப்பீட்டாளர் பாபு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. சுமார் 150 பேரின் 4 கோடி மதிப்புள்ள அடமான நகைகளில் மோசடி நடந்து இருப்பது தெரியவந்தது. இந்த புகாரில் பாபுவை கைது செய்தனர்.
இந்நிலையில், வாடிக்கையாளர்கள் நகைகளை திரும்ப கேட்டு நேற்று காலை வங்கியை திறக்க விடாமல் முற்றுகையிட்டனர்.தகவலறிந்து சோளிங்கர் போலீசார் விரைந்து வந்து வாடிக்கையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதையடுத்து, நாளை (இன்று) காலை வங்கி திறப்பதற்கு முன் மேல் அதிகாரிகளை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு வங்கி திறக்கப்படும். அதுவரை வங்கி செயல்படாது என்று போலீசார் தெரிவித்தனர்.