அலகாபாத்: குல்பூஷன் ஜாதவிற்கு தூதராக உதவி வழங்கவதாக பாகிஸ்தான் அறிவித்ததை இந்தியா ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷணை இந்தியா தூாதரக அதிகாரி கவுரங் அலுவாலியா சந்திக்கவுள்ளார். குல்பூஷனடனான சந்திப்பு சுதந்திரமாகவும், பயனுள்ளதாகவும் அமைய பாகிஸ்தான் உதவும் என நம்புகிறோம் என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரரான குல்பூஷண் ஜாதவ், 2016 ம் ஆண்டு மார்ச் மாதம் பாக்., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்தியாவிற்காக உளவு பார்த்ததாகவும், பயங்கரவாதத்தை வளர்த்ததாகவும் குற்றச்சாட்டப்பட்ட ஜாதவிற்கு, 2017 ம் ஆண்டு மரண தண்டனை விதித்து பாக்., ராணுவ கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து சர்வதேச கோர்ட்டில் இந்தியா முறையிட்டதை அடுத்து, ஜாதவிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், தூதரக உதவி அளிக்க வேண்டும் எனவும் பாக்.,க்கு சர்வதேச கோர்ட் கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது. இதனையடுத்து ஆக.,2 ம் தேதி ஜாதவிற்கு தூதரக உதவி கிடைக்க அனுமதிக்கப்படும் என பாக்., கூறியது. ஆனால் அதற்கு முந்தைய நாள், ஜாதவை இந்திய அதிகாரிகள் சந்திக்கும் போது பாக்., அதிகாரி ஒருவரும் உடன் இருப்பார் என பாக்., நிபந்தனை விதித்தது. இதனை ஏற்க இந்தியா மறுத்து விட்டதால், அந்த சந்திப்பு நடக்கவில்லை.
இந்நிலையில், ஆக., 25 செய்தியாளர்களை சந்தித்த பாக்., வெளியுறவு செய்தி தொடர்பாளர் முகமது பைசல், வியன்னா ஒப்பந்தத்தின்படியும், சர்வதேச கோர்ட் உத்தரவின்படியும் குல்பூஷண் ஜாதவிற்கு இந்திய தூதரக உதவிகள் அளிக்கப்படும். இது பாக்., சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டதாக இருக்கும் என்றார். இதனையடுத்து இந்திய தூதரக அதிகாரி கவுரவ் அலுவாலியா, குல்பூஷண் ஜாதவை இன்று சந்திக்கிறார். இதற்கான சரியான சூழலை பாகிஸ்தான் ஏற்படுத்தி கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். சர்வதேச நீதிமன்ற உத்தரவுக்கேற்ப அமையும் இந்த சந்திப்பு, மிக வெளிப்படை தன்மையுடன், சிறந்த மற்றும் அர்த்தமுள்ள ஒன்றாக இருக்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் வெளியுறவு அதிகாரியுடன் இந்திய தூதரக அதிகாரி சந்திப்பு:
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அந்நாட்டு வெளியுறவு அதிகாரி முகமது பைசலுடன் இந்திய தூதரக அதிகாரி கவுரவ் அலுவாலியா சந்தித்து வருகிறார். குல்பூஷன் ஜாதவிற்கு தூதராக உதவி வழங்கவதாக பாகிஸ்தான் அறிவித்ததை இந்தியா ஏற்றுக்கொண்டதை அடுத்து இருவரும் சந்தித்து பேசி வருகின்றனர்.