சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4வது நாளாக டாக்டர்கள் நடத்திவரும் போராட்டத்துக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்று மாநில முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக டாக்டர்கள் அறிவித்துள்ளனர். அரசாணை 354ன் படி கூடுதல் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு அவர்கள் படிப்பு முடித்ததும் அந்தந்த கல்லூரிகள் அருகிலேயே பணி வழங்க வேண்டும். முதுகலை நீட் தேர்வு மூலம் அரசு மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்களின் 50 சதவீத இட ஒதுக்கீட்டை திரும்ப அளிக்க வேண்டும். ஆகிய 4 கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 29ம் தேதி முதல் டாக்டர்கள் பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கடந்த 24ம் ேததி முதல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் 9 டாக்டர்கள் காலவரையற்ற உண்ணாவிரத பேராட்டத்தை தொடங்கினார். 4வது நாளாக இந்தப் போராட்டம் நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில் டாக்டர்களின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதன்படி திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி, மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு சென்று டாக்டர்களை நேரில் சந்தித்து டாக்டர்களின் போராட்டத்திற்கு திமுக முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், சீமான், இயக்குநர் கௌதமன், உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்திவரும் டாக்டர்களை நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் போராட்டம் நடத்தி வரும் டாக்டர்களை அரசு இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அவரச பணிகளை பாதிக்காத வகையில் இன்று ஒருநாள் மட்டும் மாநில தழுவிய அளவில் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் அறிவித்துள்ளனர்.