×

நீடிக்கும் அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் சீன பொருட்கள் மீது அமெரிக்கா மீண்டும் கூடுதல் வரி: சீனாவின் வரி விதிப்புக்கு அமெரிக்கா பதிலடி

வாஷிங்டன்: அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகப் போரில் பதற்றம் நீடிக்கும் நிலையில், அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீது நேற்று முன்தினம் சீனா கூடுதல் வரி விதித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவும் பதிலடியாக சீனப் பொருட்கள் மீது 5 சதவீத கூடுதல் வரி விதித்துள்ளது.கடந்த ஒரு வருடமாக அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகப் போர் நீடித்து வருகிறது. அமெரிக்கா அளிக்கும் வர்த்தக சலுகைகளை சீனா உள்ளிட்ட உலக நாடுகள் அனுபவித்து வருவதாகவும் அமெரிக்கப் பொருட்கள் மீது அந்நாடுகள் கூடுதல் வரி விதிப்பதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டி வந்தார். இதையடுத்து சீனா, கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஸ்டீல், அலுமினியம் உள்ளிட்ட இறக்குமதிப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்து வருகிறது.

இதனிடையே, கடந்த செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா இறக்குமதி வரியை அதிகரித்ததற்கு பழிவாங்கும் வகையில், சுமார் 5.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க சோயா பீன், நிலக்கடலை, கிரீம் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதி வரியை சீனா நேற்று முன்தினம் அதிரடியாக அதிகரித்தது. இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அதிபர் டிரம்ப் பேசியதாவது:வரும் அக்டோபர் 1ம் தேதி முதல், 21 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சீன உற்பத்திப் பொருட்கள் மீது தற்போது விதிக்கப்பட்டிருக்கும் 25 சதவீத வரி, 30 சதவீதமாக உயர்த்தப்படும். மேலும், செப்டம்பர் 1ம் தேதி முதல் 10 சதவீதமாக விதிக்கப்பட்டிருக்கும் சீனாவின் 17.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மீதான வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்படும். நேர்மையான, நியாயமான வர்த்தகம் நடைபெற நியாயமற்ற இந்த வர்த்தக உறவை சரிக்கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சீனா வேண்டுமென்றே, அரசியல் உள்நோக்கத்துடன் அமெரிக்காவின் 5.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : US-China,trade war, continues
× RELATED காரில் ரூ.11 லட்சம் சிக்கிய விவகாரம்:...