தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலராக இருந்தவர் பிரேமா. இவருக்கு கீழ் 88 அங்கன்வாடி சத்துணவு பணியாளர்கள் பணியாற்றினர். இவர்களுக்கு சம்பளம் வழங்க, கடந்த 2009 ஆகஸ்ட் மாதம் தலா 150ஐ பிரேமா லஞ்சமாக பெற்றுள்ளார். இதற்கு அதே பகுதியில் உள்ள அங்கன்வாடியில் பணியாற்றிய சந்திரகுமாரி(47), தேன்மொழி(55) ஆகிய இருவரும் உதவியாக இருந்துள்ளனர்.
செப்டம்பர் மாதத்திற்கு 250ம், அக்டோபர் மாதத்திற்கு ₹300ம் லஞ்சமாக பெற்றுள்ளார். இதுபற்றி, அங்கன்வாடி ஊழியர்கள் அளித்த புகாரின்பேரில், கடந்த 1.10.2009-ல் பிரேமா, சந்திரகுமாரி, தேன்மொழி ஆகியோரை தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. ஓராண்டுக்கு முன்பு பிரேமா உடல்நலக்குறைவால் இறந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ராஜ்குமார், புரோக்கராக செயல்பட்ட சந்திரகுமாரி, தேன்மொழிக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.