×

சென்னை - மும்பை ரயிலில் 8 லட்சம் மதிப்பு பொருட்கள் கொள்ளை: 3 பேர் கைது

மும்பை: சென்னை-மும்பை ரயிலில் 8 லட்சம் மதிப்புள்ள 3 பார்சல்களை கொள்ளையடித்த சென்னையைச் சேர்ந்த ஒருவர் உட்பட 3 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.சென்னை - மும்பை சி.எஸ்.எம்.டி. மெயில் ரயில் கடந்த 14ம் தேதியன்று அதிகாலையில் சி.எஸ்.எம்.டி. வந்து சேர்ந்தது. ரயில்வே போலீசார் அந்த ரயிலின் சரக்குப் பெட்டியை சோதித்தபோது அதில் சீல் உடைக்கப்பட்டிருந்தது. மேலும்,  பார்சல்களில் 3 மாயமாகியிருந்தன. அந்த பார்சல்களில் 26 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் இருந்ததாகத்தான் சரக்கு முன்பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த 3 பார்சல்களிலும் விலையுயர்ந்த செல்போன்கள், பணம், நகைகள்  மற்றும் கவரிங் நகைகள், வெள்ளி நகைகள் என மொத்தம் 8 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் இருந்ததை பின்னர் ரயில்வே போலீசார் தங்கள் விசாரணையில் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, ரயில் மும்பை நோக்கி வந்த திசைகளில் உள்ள ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ரயில்வே போலீசார் ஆய்வு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட சங்கர்(என்கிற) அண்ணா, அவரது  கூட்டாளிகள் விஜய் ஜாதவ்(40), அகமத் அலி அன்சாரி(19) ஆகியோரை காட்கோபரில் கைது செய்தனர். இந்த கொள்ளையில் சங்கர்தான் மூளையாக செயல்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த அவர் ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர். அவரது  குழந்தைகள் சென்னையில் உள்ள பிரபல பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்களது பள்ளிக் கட்டணத்தை செலுத்துவதற்காக இந்த கொள்ளையில் ஈடுபட்டதாக சங்கர் போலீசிடம் தெரிவித்துள்ளார். சென்னையில் வசிக்கும் அவர் அடிக்கடி மும்பைக்கு வந்து காட்கோபரில் தனது கூட்டாளிகளுடன் தங்கியிருந்து கொள்ளையடித்து விட்டு சென்னைக்கு திரும்பிச் சென்று விடுவது வழக்கம். இதுவரை 60 திருட்டு வழக்குகள் அவர் மீது உள்ளன.

Tags : Chennai-Mumbai,train , arrested
× RELATED பண்டல், பண்டலாக கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது