சென்னை: திறந்த வெளியில் குப்பை கொட்டும் கட்டிட மற்றும் வியாரிபாரிகளிடம் இருந்து சுத்தம் செய்ததற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள 14 லட்சத்து 94 ஆயிரத்து 254 வீடுகளுக்கு தினந்தோறும் சென்று குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதில் 5 லட்சத்து 40 ஆயிரத்து 953 வீடுகளில் மட்டுமே குப்பை தரம் பிரித்து அளிக்கப்படுகிறது. இந்த குப்பை பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இதை தவிர்த்து பள்ளிக்கரணை, சாத்தாங்காடு உள்ளிட்ட குப்பை கிடங்குகளில் உள்ள மறுசுழற்சி செய்யும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் துப்புரவு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நேற்று ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடந்தது. இதில் துணை ஆணையர் (சுகாதாரம் ) மதுசுதன் ரெட்டி, வட்டார துணை ஆணையர்கள் திவ்யதர்ஷினி, ஆல்பி ஜான் வர்கீஸ், தர், திடக்கழிவு மேலாண்மை துறை தலைமை பொறியாளர் மகேசன், கண்காணிப்பு பொறியாளர் வீரப்பன், மண்டல அலுவலர்கள், செயற்பொறியாளர் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேசியதாவது: அனைத்து மண்டலங்களிலும் குப்பையை தரம்பிரித்து வழங்கும் நடைமுறையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பை மறுசுழற்சி செய்வதற்கான உட்டகட்டமைப்பு வசதிகளை விரைவாக ஏற்படுத்த வேண்டும். பெரு நிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் குப்பை சேகரிப்பதற்கான பேட்டரி வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திறந்தவெளி இடங்களில் இரவு நேரங்களில் பலர் குப்பை கொட்டி விட்டு சென்றுவிடுகின்றனர். எனவே துப்புரவு கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர் தெரு வாரியாக உள்ள திறந்தவெளி இடங்களை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதில் யாராவது குப்பை கொட்டினால் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த குப்பையை அகற்றுவதற்கான கட்டணத்தை அந்த நிலத்தின் உரிமையாளரிடமிருந்து வசூலிக்க வேண்டும். பெறு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குப்பை தேக்கி வைப்பவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும். இதை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.