புதுடெல்லி: மத்திய ஆயுத போலீஸ் படையினர் அனைவருக்கும் ஒரே மாதிரியாக ஓய்வு வயது 60 ஆக நிர்ணயிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படை, சாஸ்திர சீமா பால், இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை, தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்ட துணை ராணுவப் படையினர் ஓய்வு வயதில், வெவ்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தது. மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினரின் ஓய்வு வயது 60 ஆகவும், மற்ற படையினரின் ஓய்வு வயது 57 ஆகவும் இருந்தது.
இது படை வீரர்கள் மத்தியில் பாகுபாட்டை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாகவும், அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், ஓய்வு பெறும் வயதை வரைமுறைப்படுத்தவும் டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, வீரர்கள் ஓய்வு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. இந்நிலையில், மத்திய ஆயுத போலீஸ் படையினர் அனைவருக்கும் ஓய்வு வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.