விருதுநகர்: ஆவின் பால் விலை உயர்வால் மக்களிடம் எந்த கொந்தளிப்பும் இல்லை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகரில் வருவாய்த்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை நேற்று வழங்கிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது: பால் விலை உயர்வால் மக்களிடம் எந்த கொந்தளிப்பும் இல்லை. பால் கொள்முதல் விலையும், விற்பனை விலையும் ஐந்தாண்டுகள் கூட்டப்படாத நிலையில், தற்போது கொள்முதல் விலையை கூட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் எந்தவித ஊழலும் நடைபெற வாய்ப்பே இல்லை.
மக்களுக்குத் தேவையான அனைத்து நல்ல திட்டங்களையும் அரசு தந்து கொண்டேதான் இருக்கிறது. முதியோர் உதவித்தொகை, இலவச மின்சாரம், மலிவு விலையில் இருசக்கர வாகனம் என தொடர்ந்து மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செய்வதற்காகத்தான் இந்த அரசு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.