*5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு
காளையார்கோவில் : காளையார்கோவில் அருகே 103 ஆடுகள், 100 கோழிகளை பலியிட்டு அறுசுவை விருந்து படைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சிலையாஊரணியில் சைவமுனீஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் ஆடி கடைசி வெள்ளி திருவிழா நடைபெற்றது. அன்றிரவு சைவமுனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 103ஆடுகள், 100 சேவல், கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து நேற்று காலை 7 மணியிலிருந்து பகல் 12 மணி வரை கமகம மணத்துடன் அசைவ விருந்து அன்னதானம் நடந்தது.
அன்னதானத்தில் காளையார்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சிலையாஊரணி கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். காளையார்கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெறுகிறது.