×

மத்திய அமைச்சராக இருந்த போது எதுவும் செய்யவில்லை பூமிக்கு பாரமாக இருப்பவர் சிதம்பரம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

மேட்டூர்: மத்திய அமைச்சராக இருந்தபோது நாட்டு மக்களுக்கு எதுவும் செய்யாமல் பூமிக்கு பாரமாக இருப்பவர் ப.சிதம்பரம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து விட்டார். ெதாடர்ந்து நிருபர்களிடம் அவர்  கூறியதாவது: டெல்டா பாசனத்திற்கு தற்போது 3,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. படிப்படியாக உயர்த்தப்பட்டு 10 ஆயிரம் கன அடி அளவிற்கு திறந்து விடப்படும். கடைமடைப் பகுதி வரையிலும் தண்ணீர் கொண்டு சேர்க்கப்படும். டெல்டா பகுதிகளில் இருக்கின்ற ஏரிகள், குளங்கள் முழுமையாக நிரப்பப்படும். டெல்டா பாசன பகுதிகளில் இருக்கின்ற கால்வாய்கள் சீரமைப்பை கண்காணிப்பதற்காக தனியாக ஐ.ஏ.எஸ். அதிகாரியான பாலாஜியை நியமித்து இருக்கிறோம். விவசாயிகள் 50 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட கோரியுள்ளார்கள். கால்வாய்களில் 26 ஆயிரம் கன அடி வீதம் மட்டுமே தண்ணீர் திறந்து விட முடியும். தற்போது விவசாயிகள் நாற்று நடும் பணியை செய்து வருகின்றனர். பின்னர்தான் நடவுப்பணியினை தொடங்குவார்கள். நாற்றுக்கு தேவையான தண்ணீர் தற்போது திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் அணைகள் அனைத்தும் நிரம்பி விட்டதால் அவர்கள் ஒரு சொட்டு நீரை கூட இனி சேமிக்க முடியாது.  உபரி நீர் முழுவதும் மேட்டூர் அணைக்கே வந்து சேரும். இதனால் டெல்டா பாசனத்திற்கும், தமிழகத்தின் தண்ணீர் தேவைக்கும் எந்த பிரச்னையும் இருக்காது.

நீலகிரி மாவட்டத்தில் மீட்பு பணி குறித்து நாளை (இன்று) சென்னையில் எனது தலைமையில் உயர் அதிகாரிகள் கூட்டம் நடக்கிறது. இதற்கடுத்து பணிகள் மேலும் தீவிரமடையும். தமிழகத்திற்கு அதிக அளவில் தொழிற்சாலைகள் வர வேண்டும். அயல் நாட்டில் உள்ள தொழில் அதிபர்களை அழைத்துப் பேசி அதிக முதலீட்டினை ஈர்ப்பதற்காகவே வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்கிறேன்.  சுகாதாரத்துறையில் உயர் தொழில்நுட்பங்களை கையாண்டு, மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கும் நோக்கத்திலும் வெளிநாடு பயணம் இருக்கும். காஷ்மீர் விவகாரம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறிய கருத்தை நான் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர் மத்திய அமைச்சராக இருந்த போது, தமிழகத்திற்காக என்ன திட்டத்தை கொண்டு வந்துள்ளார் .இவர் எத்தனை ஆண்டு காலம் மத்திய அமைச்சராக இருந்துள்ளார். அவரால் என்ன திட்டம் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.

தேவையான நிதியை வழங்கினாரா? தொழிற்சாலைகள் அமைத்தாரா? இல்லை புதிய திட்டங்கள் எதையாவது கொண்டு வந்தாரா? காவிரி பிரச்னையைத்தான் தீர்த்தாரா? முல்லை பெரியாறு பிரச்னையை தீர்த்தாரா? பாலாறு பிரச்னையைத்தான் தீர்த்தாரா? அவரது சுயநலம் மட்டுமே அவருக்கு முக்கியம். மக்கள் அவரை ஏற்கனவே நிராகரித்து விட்டார்கள். அவரால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை. இந்த பூமிக்கு பாரமாக இருப்பவர் சிதம்பரம். எங்களை பொறுத்த வரை 1984ம் ஆண்டே ஜெயலலிதா காஷ்மீர் விவகாரத்தில் தனது கருத்தை தெளிவாக கூறிவிட்டார். ஜெயலலிதா காட்டிய வழியைத்தான் நாங்கள் பின்பற்றி வருகிறோம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினர்.

ஏழுமலையான், அம்மாவின் அருளாசியால் மழை


மேட்டூர் அணை திறப்பு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘‘இன்னும் பருவமழை பெய்யவில்லையே, இன்றைக்கு விவசாயிகளுக்கு எப்படி தண்ணீரை திறப்பது என்று எண்ணிக்கொண்டு வேதனைப்பட்டுக் கொண்டிருந்தேன். வழக்கமாக நான், திருப்பதி ஏழுமலையானை தரிசித்துவிட்டு வந்தவுடன் மழை பெய்யும். ஆனால் இந்த முறை கொஞ்சம் கால தாமதாக ெபய்திருக்கிறது. இருந்தாலும் நாம் நினைத்தபடி, எல்லாம் வல்ல இறைவன் அருளாலும், அம்மாவின் அருளாசியோடும், ஏழுமலையான் அருளாசியோடும் இன்றைய தினம் மேட்டூர் அணைக்கு 2.30லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது,’’ என்று கூறினார்.

600 கோடியில் கான்கிரீட் கால்வாய்

விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், விவசாயிகள் அனைவரும்  நீரை பங்கீட்டு, நிலைமைக்கேற்ப சிக்கனமாக பயன்படுத்தி, அதிக மகசூல் பெற்று பயன் பெற வேண்டும். பருவ காலங்களில் பெய்கின்ற மழை நீர் ஒரு சொட்டு கூட வீணாகக்கூடாது என்பதற்காக,ஓடையின் குறுக்கே, நதிகளின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுகின்றன. மேட்டூர் அணையில் இருந்து கொள்ளிடம் வரை கிட்டத்தட்ட 5 தடுப்பணைகள் கட்டுவதற்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

2 தடுப்பணைகள் கட்டுவதற்கு அனுமதி கொடுத்து விட்டோம். மேலும் 3 தடுப்பணைகள் கட்டுவதற்கு அரசின் பரிசீலனையில் உள்ளது. கோதாவரி-காவிரி இணைப்புத்திட்டம் நிறைவேற்றப்படும். இதற்காக திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கி விட்டது. பருவமழை காலங்களில் எங்கெங்கெல்லாம் மழை நீர் வீணாக கடலில் கலக்கிறது என்பதை ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட ஓய்வு பெற்ற பொறியாளர்கள் நியமித்து, அந்த அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். 600 கோடியில் மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய்கள் முழுவதும் மேட்டூர் அணையில் இருந்து அது முடிகின்ற வரை கான்கிரீட் கால்வாயாக அமைக்கப்படும். இதன் மூலம் 20 சதவீதம் தண்ணீர் வீணாகாமல் மிச்சப்படுவதோடு ஆண்டுதோறும் தூர் வாரும் நிலையும் மாறும் என்றார்.

Tags : Chief Minister Edappadi Palanisamy's attack ,Chidambaram
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...