×

பணம் வைத்து சூதாட்டம் பெண்கள் உட்பட 27 பேர் கைது

சென்னை: பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 27 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 76 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் சட்டத்திற்கு புறம்பாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், டி.பி.சத்திரம் நான்கு அடுக்கு பகுதியில் பணம் வைத்து சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக டி.பி.சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசர்ா நான்கு அடுக்கு சி.பிளாக் பின்புறம் உள்ள ஒரு வீட்டின் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் ஆட்கள் நடமாட்டம் இருந்தது. போலீசார் அதிரடியாக வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தினர். அப்போது பணம் ைவத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட வீட்டின் உரிமையாளர் பிரசாத் (எ) புருஷோத்தமன் (42) மற்றும் 2  பெண்கள் உட்பட 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 47,290 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல், அண்ணாசாலை தனியார் தங்கும் விடுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ரமேஷ்பாபு (36), புகழ் (எ) சாமுவேல் (52) உட்பட 12 பேரை ஆயிரம் விளக்கு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 27400 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வேப்பேரி பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள தனியார் லாட்ஜில் சூதாட்டத்தில் ஈடுபட்ட அருண்குமார் (34) உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.  ஒரே நாளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 27 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Money, gambling, women, 27 arrested
× RELATED அச்சிறுப்பாக்கம் அருகே பரபரப்பு:...