×

கோர்ட் வாய்தாவுக்கு வந்து சென்றபோது காதல்... ரவுடியை கரம்பிடித்த பெண் போலீஸ்

லக்னோ: நீதிமன்றத்துக்கு வாய்தாவுக்கு வந்து சென்ற ரவுடியுடன், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசுக்கு காதல் ஏற்படத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இச்சம்பவம் உத்தரபிரதேச போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த உள்ளூர் தாதாவான ராகுல் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அடிக்கடி சிறைவாசம் அனுபவித்து வந்தாலும் வெளியில் வந்த பிறகும் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால், தற்போது அவர் நடத்தியுள்ள காதல் கதை, போலீசார் மத்தியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கிரேட்டர் நொய்டா பகுதியைச் சேர்ந்த பெண் காவலர் பாயல் என்பவர் சுராஜ்பூர் நீதிமன்றத்தில் பணிபுரிந்தார். அப்போது அங்கு கொலை வழக்கு ஒன்றின் குற்றவாளியாக ஆஜரான ராகுல் தரசனா என்பவர் மீது பெண் போலீசுக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

பார்த்த நொடியில் இருவரும் காதல் வயப்பட ஜெயிலில் இருந்தபோதும், பெயிலில் வந்தபிறகும் ராகுல் உடன் தொடர்பில் இருந்துள்ளார் பாயல். இருவரும் சில வருடங்களாகக் காதலித்து வந்தாலும் வெளியில் யாருக்கும் இதுகுறித்த தகவல் தெரியவில்லை. இந்நிலையில் சமீபத்தில் இருவரும் திருமணம் செய்துள்ளனர். இந்தப் புகைப்படத்தை ராகுல் வலைதளங்களில் பதிவிடவே, அது வைரலாகப் பரவியுள்ளது. இதைப் பார்த்ததும் உத்தரபிரதேச போலீசார் ஷாக் ஆகியுள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், இந்தத் திருமணம், வெளிப்படையாக மாநில காவல்துறைக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் நடந்தது உண்மையா? என்பது குறித்தும் ராகுல் செய்த குற்றங்களில் எதிலாவது பாயலுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தவுள்ளோம். பாயல் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது என்றனர்.

Tags : Love, Rowdy, Police
× RELATED ஜன.17 அரசு விடுமுறை என்பதால் பிப்.4-ம்...