பெங்களூரு: அரசியலை விட்டு விலகலாமா என யோசித்து வருகிறேன் என கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டசபையில் சமீபத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான அரசு தோல்வியடைந்தது. முதல்வர் பதவியில் இருந்து குமாரசாமி ராஜினாமா செய்தார். பின்னர், எடியூரப்பா தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறுவதாவது; அரசியலில் இருந்து விலகி இருக்க நினைக்கிறேன். எதிர்பாராத விதமாக அரசியலுக்கு வந்த நான் எதிர்பாராத விதமாக முதல்வர் ஆனேன்.
இரண்டு முறை முதல்வர் ஆவதற்கு கடவுள் எனக்கு வாய்ப்பு வழங்கினார். இனியும் அரசியலில் தொடர விரும்பவில்லை; மக்கள் மனதில் இடம் கிடைத்தால் போதும். யாரையும் திருப்திபடுத்த வேண்டிய அவசியமில்லை; மாநில வளர்ச்சிக்காக 14 மாதங்கள் நன்றாக வேலை செய்தேன். இன்றைய அரசியல் எப்படி போய் கொண்டிருக்கிறது என்பதை கவனித்து வருகிறேன். இது மக்களுக்கு நல்லதல்ல. நான் ஆட்சியில் இருந்த போது நல்லது செய்தேன். மக்களின் மனங்களில் இடம் பெற வேண்டும் என விரும்புகிறேன் என கூறியுள்ளார்.