×

நீட் மசோதா திருப்பி அனுப்பப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும், எந்த ஒரு பொதுத்தளத்திலும் தகவலை வெளியிடாதது ஏன் ? : தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி

சென்னை : மத்திய அரசினால் நீட் மசோதா திருப்பி அனுப்பப்பட்டதை 2 ஆண்டுகளாக சட்டப்பேரவையில் தெரிவிக்காதது ஏன் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

மருத்துவ படிப்புகளில் தமிழக  மாணவர்களுக்கு  நீட் தேர்வில் இருந்து விலக்களித்து கடந்த 2017ம் ஆண்டு  தமிழக சட்டப்பேரவையில், இரு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.  அந்த இரு சட்ட மசோதாக்களுக்கும் ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு மாணவர்கள் பெற்றோர் நலச் சங்கம் உள்பட 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

உள்துறை அமைச்சகத்தின் துணை செயலாளர் பதில் மனு

ந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க மறுத்தது தொடர்பாக 2017 செப்டம்பர் 22ம் தேதியே தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணை செயலாளர் ராஜூ எஸ்.வைத்யா பதில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் 2 ஆண்டுகளுக்கு முன்பே நீட் விலக்கு மசோதாக்கள் அனுப்பப்பட்டுவிட்டதாக உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்திருந்தது.  

மேலும் அந்த பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு :


*நீட் தேர்வு விலக்கு மசோதா 2017 பிப்ரவரி 20ல் கிடைத்த நிலையில் அதே ஆண்டு செப்டம்பர் 22ல் திருப்பி அனுப்பப்பட்டது.

*2017 செப்டம்பர் 11ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக நீட் விலக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.

*2017ம் ஆண்டு செப்டம்பர் 18ந் தேதி தமிழக அரசின் 2 நீட் விலக்கு மசோதாக்களை குடியரசுத் தலைவர் நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

*குடியரசுத் தலைவர் நிறுத்தி வைத்த 2 நீட் விலக்கு மசோதாக்கள் 2017 செப்டம்பர் 22ம் தேதி மத்திய அரசு தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டது.

*2017ம் ஆண்டு செப்டம்பரில் நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு குறித்து தமிழக அரசுக்கு கடிதம் மூலம் தெரிவித்தோம்.

பதில் மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள்

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பதில் மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர்தான் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை  ஆகஸ்ட் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

நீதிபதிகள் கேள்வி


இந்நிலையில் இந்த வழக்கு வியாழனன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2017 செப்டம்பர் 22ம் தேதி திருப்பி அனுப்பட்ட நீட் தொடர்பான மசோதாவை 3 நாட்களில் தமிழக அரசு பெற்றுக்கொண்டதற்கான சான்றொப்பத்தை மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து  நீதிபதிகள் தெரிவித்துள்ளாவது பின்வருமாறு :  

நீதிபதிகள் : பழைய மசோதா நிராகரிக்கப்பட்டால் மீண்டும் புதிய மசோதா அனுப்ப விதிகள் இருந்தும் அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?

நீதிபதிகள் : நீட் விலக்கு தொடர்பாக மக்கள் பரவலாக பேசி வந்த நிலையில் தமிழக அரசு மவுனம் காத்தது ஏன்?

நீதிபதிகள் : எந்த ஒரு பொதுத்தளத்திலும் தகவலை வெளியிடாதது ஏன் ?

நீதிபதிகள் : 2017 ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு இவ்வளவு நாட்கள் நிலுவையில் இருந்தும் நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட தகவல் உங்கள் வாயிலிருந்து வரவில்லை ?

நீதிபதிகள் : நீட் விலக்கு மசோதா நிறுத்திவைப்பு என்றாலே திருப்பி அனுப்பப்பட்டது என்றுதான் அர்த்தம்.

நீதிபதிகள் :  நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட பின் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து தமிழக அரசு விளக்களிக்க வேண்டும்.

இவ்வாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு ஆகஸ்ட் 13ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.

Tags : Tamil Nadu Government, High Court, Question, Need Bill
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...