சிலிகுரி: மேற்கு வங்கத்தில் அரசியல் சூழ்நிலையை மாற்றும் நேரம் வந்துவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே, கடந்த மார்ச் 27ம் தேதி முதல் கட்டமாக 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து, கடந்த 1ம் தேதி 30 தொகுதிகளுக்கும், 6ம் தேதி 31 தொகுதிகளுக்கும் முறையே 2வது, 3வது கட்டங்களில் வாக்குப்பதிவு நடந்தது. இதனை தொடர்ந்து, இன்று 4வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்னும் 4 கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரச்சாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, கூச்பெஹாரில் நிகழ்ந்த சம்பவம் கவலை அளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறேன். பா.ஜ.,விற்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து மம்தாவும், அவரது கட்சி குண்டர்களும் கவலை அடைந்து உள்ளனர். தோல்வி பயத்தால், மம்தா, திரிணமுல் குண்டர்கள் இந்தளவு தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபட்டு உள்ளனர். இதுபோன்ற பணிகளை, செய்ய அனுமதிக்க முடியாது என மம்தாவிற்கு தெரிவித்து கொள்கிறேன். கூச்பெஹார், சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை கேட்டு கொள்கிறேன்.இது மாதிரியான வன்முறைகள், பாதுகாப்புபடையினருக்கு எதிராக மக்களை தூண்டி விடும் சூழ்ச்சிகள், தேர்தல் நடவடிக்கையை நிறுத்தும் சூழ்ச்சி போன்றவை உங்களை பாதுகாக்காது என்பதை மம்தா தெரிந்து கொள்ள வேண்டும். 10 ஆண்டுகாலம் மோசமான நிர்வாகம் நடத்திய உங்களை இது போன்ற வன்முறைகள் காப்பாற்றாது. பல ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் உருவாக்கப்பட்ட அரசியல் சூழ்நிலையை மாற்றும் நேரம் வந்து விட்டது என்றார். மம்தா மற்றும் டி.எம்.சி தலைவர்களின் சிந்தனை வெளிப்படையாக வெளிவருகிறது. ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, அங்கு மம்தாவிற்கு நெருக்கமான ஒரு தலைவர் எஸ்சி சமூக உறுப்பினர்களை அவமதிப்பதைக் காணலாம். வங்காளத்தில் எஸ்சி சமூகம் பிச்சைக்காரர்களைப் போலவே செயல்படுகிறது என்று அவர் கூறியிருந்தார் என்று தெரிவித்தார். …
The post பாஜக ஆதரவை கண்டு மம்தா கவலை: மேற்கு வங்கத்தில் அரசியல் சூழ்நிலையை மாற்றும் நேரம் வந்துவிட்டது: பிரதமர் மோடி பேச்சு.!!! appeared first on Dinakaran.