×

ஜாம்புவானோடை படகுதுறையில் பழுதடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும்: மீனவர்கள் கோரிக்கை

முத்துப்பேட்டை: ஜாம்புவானோடை படகுதுறையில் உள்ள பழுதடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை படகுதுறையில் மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக கரையிலிருந்து ஆற்றுக்குள் ஒரு சுமார் 50அடி நீளம் உள்ள பாலம் ஒன்று உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பழமையான பாலம் தற்பொழுது முற்றிலும் பொலிவுஇழந்து உள்ளது. மேலும் பாலத்தின் தாங்கு பில்லர்கள், கைப்பிடி சுவர்கள் தூண்கள் முற்றிலும் சேதமாகி பல பகுதிகள் ஒவொன்றாக இடிந்து விழுந்து வருகிறது. மேலும் சிலாப் பகுதிகளும் விரிசல் ஏற்பட்டுள்ளது. பாலத்தின் பலபகுதி முற்றிலும் சிமிண்ட் பூச்சுகள் விழுந்து கம்பிகள் வெளியில் தெரிகிறது. தினந்தோறும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களும், அதேபோல் இவ்வழியாக ஆசியாவின் மிகப்பெரிய காடான அலையாத்திக்காட்டுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளும் படகில் ஏற பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பாலத்தின் பகுதிகள் ஏதும் இடிந்து விழுந்தால் மிக பெரிய பாதிப்புகள் ஏற்படும். அதேபோல் கைபிடி சுவர்கள் தூண்கள் இடிந்து விழுந்துள்ளதால் சுற்றுலாவுக்கும் செல்லும் பயணிகளுடன் வரும் குழந்தைகள் தவறி ஆற்றுக்குள் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனை சீரமைப்பு செய்து புதுப்பிக்க வேண்டும் என்று மீனவர்களும் சுற்றுலா பயணிகளும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் யாரும் கண்டுக்கொள்ளவில்லை. இந்தநிலையில் சமீபத்தில் இதன் அருகே ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன்பிடி தளம் கட்டப்பட்டது. அப்போது கூட இந்த பொலிவிழந்த பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் முன்வரவில்லை. எனவே மீனவர்கள், சுற்றுலா பயணிகள் நலன்கருதி இந்த பழுதடைந்த பாலத்தை சீரமைப்பு செய்து தரவேண்டும் அல்லது இதனை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டித்தரவேண்டும் என்று இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது….

The post ஜாம்புவானோடை படகுதுறையில் பழுதடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும்: மீனவர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Jambuwanodai Ferry ,Muthuppet ,Thiruvarur District ,Dinakaran ,
× RELATED முத்துப்பேட்டையில் தொடக்கப்பள்ளி சார்பில் ஐம்பெரும் விழா