சென்னை: புதிதாக நியமிக்கப்பட்ட துணை ஆணையரை பதவி ஏற்கவிடாமல் உதவி ஆணையர் ஒருவர் மிரட்டியதாக வெளியான சம்பவம் அறநிலையத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள பெருமாளுக்கு புகழ்பெற்ற கோயிலின் துணை ஆணையர் கடந்த 2015ம் ஆண்டு ஓய்வு பெற்றுவிட்டார். இதை தொடர்ந்து அவருக்கு கீழ் பணியாற்றி வந்த உதவி ஆணையர் ஜோதி லட்சுமிக்கு அந்த பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது. அந்த நாள் முதல் அந்த கோயிலை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ஜோதி லட்சுமி துணை ஆணையர் பதவிக்கு யாரையும் நியமிக்க விடாமல் பார்த்துக் கொண்டார். தொடர்ந்து, அவர் மீது ஏராளமான புகார்கள் அறநிலையத்துறைக்கு சென்றன. இதையடுத்து, பெருமாள் பக்தர்கள் எல்லாம் அவர் மீது புகார்களை தட்டிவிட ேஜாதி லட்சுமியை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் பிரசாதத்துடன் பல பொருட்கள் அடங்கிய பையை பலருக்கு கொடுத்து இடமாற்றத்தை ரத்து செய்துவிட்டார். இதன்பிறகு 2வது முறையாக இடமாற்றம் செய்தபோதும் அதே பையை பயன்படுத்தி அந்த உத்தரவையும் ரத்து செய்துவிட்டார். இவ்வாறு துணை ஆணையர் அந்தஸ்து கொண்ட பதவியில் மூன்று ஆண்டுகளாக உதவி ஆணையராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் 23 ஆணையர்களை இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் உதவி ஆணையர் ஜோதிலட்சுமி நாமக்கலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். திருச்சியில் பணியாற்றி வந்த துணை ஆணையர் ெஜயப்பிரியா இந்த பொறுப்புக்கு நியமனம் செய்யப்பட்டார். தொடர்ந்து, துணை ஆணையர் ஜெயப்பிரியா பதவி ஏற்பதற்காக கடந்த வாரம் கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு போன் செய்த உதவி ஆணையர் ஜோதி லட்சுமி, நீங்க கிளம்பி போங்க, நான் உயர் அதிகாரிகளிடம் பேசி இருக்கேன். எனக்குதான் அந்த கோயில் என்று தெரிவித்துள்ளார். எனவே, அதிகாரி ஜெயப்பிரியா புறப்பட்டு சென்றுவிட்டார்.உதவி ஆணையர் ஜோதி லட்சுமி பொறுப்புகளை ஒப்படைக்காமல் தொடர்ந்து அந்தப் பதவியில் இருந்து வருகிறார். இதை அறிந்த உயர் அதிகாரிகள் நீங்கள் இல்லாமல் அந்த கோயிலில் எதுவும் நடைபெறாதா, உற்சவங்களை முடித்துவிட்டு செல்கிேறன் என்று ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். நீங்கள் இல்லாமல் எந்த உற்சவமும் நடைபெறாதா என்று கொந்தளிப்புடன் கேள்வி எழுப்பியுள்ளனர். இவற்றை எதையும் கண்டுகொள்ளாத உதவி ஆணையர் ஜோதி லட்சுமி பிரசாதம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அடங்கிய பல பைகளை தயார் செய்து கொண்டு பணியிட மாற்றத்தை ரத்து செய்ய முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்.