சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வரும் 26ம் தேதி டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியம் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: டாஸ்மாக் நிறுவனம் 5,400 சில்லரை மதுபான விற்பனை கடைகளை நடத்தி வருகிறது. இந்த கடைகளில் 27 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில், 15 ஆண்டுகாலமாக டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கவில்லை. மேலும், திடீரென டாஸ்மாக் கடைகளை மூடுவதால் ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனரிடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தநிலையில், நேற்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆனால், இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. எனவே, டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் வரும் 26ம் தேதி டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அலுவலகம் முன்பு காலை 10 மணிக்கு மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொள்ள உள்ளனர். இவ்வாறு கூறினார்.