மன்னார்குடி: கூத்தாநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் காயமடைந்த பெண் தலையில் தையல் போட்டு துப்புரவு தொழிலாளி சிகிச்சை அளிக்கிறார். இச்சம்பவம் வீடியாவில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாருர் மாவட்டம் கூத்தாநல்லூரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு போதுமான டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ உதவியாளர்கள் இல்லை. எனவே இந்த மருத்துவமனையில் செவிலியர்கள் மருத்துவம் பார்ப்பதும் சிகிச்சை அளிப்பதும் ,துப்புரவு பணியாளர்கள் விபத்துக்குள்ளாகி வருபவர்களுக்கு தையல் போடுவதும் நடந்து வருகிறது. 2 தினங்களுக்கு முன் தலையில் அடிபட்டு ஒரு பெண் கூத்தாநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்தார். அப்போது அங்கு டாக்டர் இல்லை. நர்ஸ் பணியில் இருந்தார். அவர் அங்கிருந்த பெண் துப்பரவு பணியாளரிடம் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கும்படி கூறினார். இதைத்தொடர்ந்து துப்புரவு பணியாளர், காயமடைந்த பெண்ணை படுக்க வைத்து தலையில் காயம் பட்ட இடத்தில் தையல் போட்டு மருந்து போட்டார்.
எம்.எஸ். படித்த டாக்டர் போல, துப்புரவு பணியாளர் தையல் போட்டார். அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து எதுவும் கொடுக்காமலேயே தையல் போட்டதால் அவர் கதறி துடித்தார். ஆனாலும் துப்புரவு பெண் பணியாளர் அசரவில்லை. துணிந்து கோணிப்பையை தைப்பது போல தைத்து முடித்து அந்த இடத்தில் மருந்து போட்டு அனுப்பி வைத்தார். இந்த காட்சியை, அந்த பெண்ணுடன் உதவிக்கு வந்தவர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுவிட்டார். இந்த காட்சி வைரலாக பரவியது.