×

தமிழகத்திற்கு 9.2 டிஎம்சி தண்ணீர் கிடைக்குமா? காவிரி ஆணையம் இன்று டெல்லியில் கூடுகிறது

புதுடெல்லி: குறுவை சாகுபடிக்காக காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கர்நாடகா அரசு தண்ணீர் திறந்துவிடாத நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் இன்று மீண்டும் கூடுகிறது. இதில் தமிழகம் உட்பட நான்கு மாநில பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் காவிரிநீரை பகிர்ந்து கொள்ளும் விதமாக நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 4 மாநிலங்களும் மேற்கண்ட இரு அமைப்புகளுக்கான தங்களது தரப்பின் பிரதிநிதி உறுப்பினர்களை நியமித்து உள்ளன.

இதில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இதுவரை மூன்று முறை கூடி நடந்துள்ளது. இதில் கடந்த மாதம் 28ம் தேதி கூடிய அந்தக் கூட்டத்தில், தமிழகத்திற்கு ஜூன் மாதத்தில் திறக்க வேண்டிய 9.19 டிஎம்சி காவிரி நீரை உடனடியாக திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தரப்பில் உத்தரவிடப்பட்டது. ஆனால் இதுவரை ஆணையத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது.  இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறும் செயல் என தமிழக விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்த மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் காவிரியில் இருந்து 4.5டி.எம்.சி தண்ணீர் வந்து இருக்க வேண்டும். ஆனால் ஒரு டிஎம்சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 21ம் தேதி நடைபெற்ற ஒழுங்காற்று குழுவின் கூட்டத்தின் போது காவிரியில் இருந்து ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் படி நீர் திறந்து விட வேண்டும் என தமிழக அரசின் பிரதிநிதிகள் வலியுறுத்தினார்கள். ஆனால் பருவமழை பெய்தால் தான் காவிரியில் இருந்து நீர் திறக்க முடியும். இல்லையேல் கண்டிப்பாக கொடுக்க வாய்ப்பில்லை என கர்நாடக ாதிட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து வாதிட்டது. இதனால் தமிழகத்திற்கு உண்டான நீர் பங்கீடு கிடைப்பதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற சூழலில் தான் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தரப்பில் இருந்து கடந்த 13ம் தேதி ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களின் நீர் பங்கீடு பிரச்சனை குறித்து ஆலோசிக்கும் விதமாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் 25ம் தேதி அதன் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது. அதனால் நான்கு மாநிலங்களின் ஆணைய பிரதிநிதிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்’’ என அதில் குறிப்பிடப்பட்டது.

அதன்படி, இன்று நடைபெறவிருக்கும் கூட்டத்தின் போது தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படாதது பற்றியும், அதேபோல் வரும் ஜூலை மாதத்தின் ஒதுக்கீடான 30 டிஎம்சி தண்ணீரையும் கர்நாடக அரசு திறக்க உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்படும் என தெரிகிறது. இதில் ஜூன் மாத பங்கீடான 9.19 டிஎம்சி தண்ணீர் திறக்க ஆணையம் உத்தரவிட்டிருந்த பிறகும் இதுவரை 4.5 டிஎம்சி நீர் மட்டுமே காவிரியில் இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதுகுறித்தும் ஆணைய தலைவரிடம் புகார் தெரிவிக்க தமிழக பிரதிநிதிகள் திட்டமிட்டுள்ளனர்.

பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை
இந்த நிலையில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு தலைவரான பி.ஆர்.பாண்டியன் நேற்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மசூத் உசேனை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கர்நாடக அரசு சட்ட விரோதமாக அரசியல் லாபம் கருதி மேகதாதுவில் புதிய அணை கட்ட முயன்று வருகிறது. இது கண்டிக்கத்தக்க ஒன்றாகும். இதற்கு மத்திய அரசும் மறைமுகமாக அனைத்து உதவிகளையும் கர்நாடகா அரசுக்கு செய்து வருகிறது. மேலும் காவிரியில் இருந்து வரும் உபரி நீர் தமிழகத்திற்கு மட்டும் தான் சொந்தம். உரிமைக்கோர கர்நாடகாவிற்கு அதிகாரம் கிடையாது. காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் கர்நாடகாவின் செயலுக்கு கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’’ என்றார்.  

புதிய தலைவர் காவிரி ஆணையத்தின் தலைவராக இருக்கும் மசூத் உசேனின் பதவிக்காலம் வரும் 30ம் தேதியோடு முடிவடைகிறது. இதையடுத்து அவருக்கு பின்னர் யார் பொறுப்பேற்பார் என்பது கேள்வியாக இருந்த வந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், காவிரி ஆணையத்தின் புதிய தலைவராக அருண் குமார் சின்கா நியமிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இவர் தற்போது கங்கை தூய்மை படுத்தல் மற்றும் வெள்ள பாதிப்பு குறித்த துறையில் பணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags : Tamil Nadu ,Cauvery Commission ,Delhi , Tamil Nadu, 9.2 TMC Water, Cauvery Commission, Delhi
× RELATED அங்கித் திவாரி விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க அவகாசம்