புதுடெல்லி: வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று முறைப்படி பாஜவில் இணைந்தார். மக்களவை தேர்தலில் பாஜ வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது முறை பிரதமராக மோடி பதவியேற்றுக் கொண்டார். ஏற்கனவே இருந்த அமைச்சர்களில் ஒரு சிலர் உடல் நலன் சரியில்லாததால் அமைச்சரவையில் பங்கேற்காமல் விலகினர். இதனைத் தொடர்ந்து வெளியுறவு துறை அமைச்சர் பொறுப்பு முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டது. அவர் கடந்த மே 30ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் பாஜ உறுப்பினர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜெய்சங்கர் நேற்று முறைப்படி பாஜவில் இணைந்தார். கட்சியின் செயல் தலைவர் ேஜ.பி.நட்டா தலைமையில் அவர் பாஜவில் இணைந்தார். பதவியேற்ற 6 மாதத்திற்குள் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும். எனவே குஜராத்தில் காலியாகும் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் பாஜ வேட்பாளராக ஜெய்சங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். மற்றொரு வேட்பாளராக ஜூகாலிஜி மதுஜி தாகோர் அறிவிக்கப்பட்டுள்ளார்.