×

தீபாவளி முன்பதிவு துவங்கியது தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படுமா?: பயணிகள் எதிர்பார்ப்பு

அருப்புக்கோட்டை: தீபாவளிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய நிலையில், தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று கொண்டாடப்பட உள்ளது. பணி, தொழில், வியாபாரம், படிப்பு சம்பந்தமாக சென்னை உட்பட கோவை, திருச்சி, நெல்லை என பல்வேறு முக்கிய நகரங்களில் தங்கியுள்ள மக்கள், தீபாவளி திருநாளை கொண்டாட சொந்த ஊர் செல்ல கார், ரயில், பஸ், மற்றும் விமானங்களில் முன்பதிவு செய்து செல்வது வழக்கம்.  இச்சூழலில் தீபாவளிக்காக சொந்த ஊருக்கு பயணம் செய்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் ஜூன் 29ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாட சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளவர்கள், ஜூன் 29ம் தேதி முதல் ரயில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக 120 நாட்களுக்கு முன்னதாகத்தான் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். அந்த வகையில், அக்டோபர் 21ம் தேதி ரயிலில் செல்ல நேற்றும், 22ம் தேதி ரயிலில் செல்ல இன்றும் முன்பதிவு நடந்தது. 23ம் தேதி ரயிலில் செல்ல நாளையும், 27ம் தேதி ரயிலில் செல்ல ஜூன் 29ம் தேதியும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய முன்பதிவு இரவு 8 மணி வரை நடந்தது. தெற்கு ரயில்வே இணைய தளத்தில் ஜூன் 29 காலை 8 மணி முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரயில்வே துறை போதிய சிறப்பு ரயில்களை இயக்கவில்லை. லாப நோக்கத்தோடு பிரிமியம் ரயில்களை இயக்குவதில் மட்டுமே  கவனம் செலுத்தியது. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லை. இதனால் ரயில் பெட்டிகள் அனைத்தும் காலியாகவே சென்று வந்தன.

சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு வரும் நெல்லை, பாண்டியன், முத்துநகர், பொதிகை, அனந்தபுரி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், வைகை, குருவாயூர், சிலம்பு, செந்தூர் உள்ளிட்ட ரயில்களில் சாதாரண நாட்களிலேயே கூட்டம் அலைமோதும்.  எனவே ரயில்வே துறை இந்த ஆண்டு தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும்.  மேலும் கோவை, பெங்களுர், சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மதுரை, செங்கோட்டை, ராமேஸ்வரம் மார்க்கமாக சிறப்பு ரயில்களையும், முன்பதிவு இல்லாத பெட்டிகளை கொண்ட சேர் கார் ரயில்களையும் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Diwali ,booking ,districts ,Southern , Diwali Booking, Southern Districts, Extra Trains, Passengers
× RELATED ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு நடத்தி ரூ.57 லட்சம் மோசடி செய்த பெண் கைது