×

கிளியாப்பட்டு ஏரிப்பகுதியில் கால்நடைகளின் தாகம் தீர்க்க தொட்டியில் தண்ணீர் நிரப்ப வேண்டும்

* பொதுமக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை :   கால்நடைகளின் தாகம் தீர்க்கும் வகையில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கிராமப்புறங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்படுகிறது. இந்த தொட்டிகளுக்கு அருகில் போர்வெல் அமைத்து அல்லது குடிநீர் குழாய் இணைப்பு மூலம் தினமும் தண்ணீரை தேக்கப்படும். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் ₹20 ஆயிரம் மதிப்பில் கால்நடைகளின் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது. மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் தேங்கிய தண்ணீரை குடித்து தாகம் தீர்த்து கொள்ளும். ஆனால், தற்போது நிலவி வரும் கடும் வறட்சியால் நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு, மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் தண்ணீர் தேடி அலையும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை அடுத்த கிளியாப்பட்டு ஏரிப்பகுதியில் உள்ள தொட்டியில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. தற்போது நிலவி வரும் குடிநீர் பிரச்னையில் நாள்தோறும் நிரப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம். இருப்பினும், கடும் வெயில் மற்றும் வறட்சியை மனதில் கொண்டு கிராமங்கள்தோறும் கட்டப்பட்டுள்ள கால்நடைகளுக்கான தண்ணீர் தொட்டிகளில் வாரத்திற்கு ஒரு முறையாவது தண்ணீர் நிரப்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


Tags : lake , water,Water Tanks,wild animals,tiruvannamalai
× RELATED தேக்கடி ஏரியை நீந்தி கடந்த புலி படகு சவாரியில் பார்த்து ரசித்தனர்