×

ராமேஸ்வரம் மீனவர்கள் சோகம் : குறைந்தது இறால் மீன்பாடு

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் இருந்து நேற்றுமுன்தினம் காலை கடலுக்கு சென்ற மீனவர்கள், நேற்றுகாலை கரை திரும்பினர். குறைந்த அளவு இறால் மீன்களே கிடைத்ததால் கவலையடைந்தனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்றுமுன்தினம் 800க்கும் அதிகமான விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இரவு முழுவதும் மீன்பிடித்து விட்டு நேற்றுகாலை அவர்கள் கரை திரும்பினர். சிறிய படகுகளுக்கு அதிகபட்சமாக 70 கிலோவும், பெரிய படகுகளுக்கு 150 கிலோ வரையிலும் இறால் மீன்பாடு இருந்தது. இறால் மீன்கள் குறைவாக கிடைத்துள்ளதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

 தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற முதல் நாள் 800 கிலோ வரை இறால் மீன்பாடு இருந்ததால், கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து 2ம் நாள் அதிகபட்சமாக 250 கிலோ இறால் மீன் கிடைத்ததால், விலை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இந்த நிலையில், நேற்று காலை குறைவான அளவு இறால் மீன்களுடன் மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர்.

இதற்கிடையில், ஜூன் 18ம் தேதி நள்ளிரவு ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த டேனியல், செல்வகுமார் உள்பட 4 பேருக்கு சொந்தமான படகில் மீனவர்கள் அனுமதி டோக்கன் வாங்காமல் கடலுக்குச் சென்றனர். இச்சம்பவம் மீனவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. அனுமதியின்றி கடலுக்கு சென்ற 4 படகுகளுக்கும் மீன்பிடி அனுமதி டோக்கன் மற்றும் டீசல் டோக்கன் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Rameswaram , Rameshwaram, Fisherman, Shrimp minpatu
× RELATED ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வழக்கு:...