சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் பரீத்கோட் மாவட்டத்தில் கடந்த 2015 அக்டோபரில் சீக்கியர்களின் புனித நூலான `குரு கிராந்த் சாகிப்’பின் சில பகுதிகள் கிழித்து எரிக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து ஏற்பட்ட கலவரத்தில் இரண்டு சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தேரா சச்சா சவுதா அமைப்பை சேர்ந்த மகிந்தர்பால் பிட்டு கைது செய்யப்பட்டு நாபா சிறையில் அடைக்கப்பட்டான். இந்நிலையில், நாபா சிறையில் அவனுடைய அறையில், வேறு ஒரு கொலை வழக்கு குற்றவாளிகளான குருசேவாக் சிங், மகிந்தர் சிங் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் மகிந்தர்பாலை கடந்த சனிக்கிழமை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளனர். இதனால் பஞ்சாப்பில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.